கிளம்பிட்டாங்களே... ஆசிரியர்களுக்கு எதிராக ஆங்காங்கே பெற்றோர்களும் போராட்டம்... போராட்டம்!
Recommended Video
சென்னை: எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்துக்கொள்வது என்பது போல, தங்களின் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்று, பெற்றோர்களும், ஆசிரியர்களுக்கு எதிராக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது, பதிலுக்கு பதில் என்பது போல இருந்தாலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது ஆசிரியர்கள் போராட்டத்திற்கு எதிராக பெற்றோர்கள் போராட்டத்தில் குதிக்க ஆரம்பித்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஓஎம்ஆர் சாலையி சிக்னலில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த நான்கு நாட்களாக ஆசிரியர்கள் வகுப்பு எடுக்க பள்ளிக்கு வராததால் மாணவர்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இந்நிலையில் தங்களது பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறதே என்கிற கவலையில் துரைப்பாக்கம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு போக்குவரத்து நெரிசல் அடைந்ததை அடுத்து போராட்ட களத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர்களையும் சமாதானப்படுத்தினர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் ஆசிரியர்களை கைது செய்ததால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று துரைப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் பள்ளியில் கடந்த நான்கு தினங்களாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள் தினம்தோறும் பள்ளிக்கு சென்று பாடம் நடத்தாமல் இருப்பதால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதைப் பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தை விட்டு துரைப்பாக்கம் சிக்னல் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது ஒட்டுமொத்தமானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.