பள்ளி பெற்றோர் மீட்டிங்கில்.. என்ஜினியரிங் படிக்கவைக்க ஆசை.. ஒருவர் மட்டுமே கை தூக்கிய கொடுமை
சென்னை: பள்ளியில் நடந்த பெற்றோர் மீட்டிங்கில் என்ஜினியரிங் படிக்க வைக்க ஆசை என 200 பெற்றோரில் ஒருவர் மட்டுமே கைதூக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை ஆமோதிக்கும் வகையில் இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்பில் 92 ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அந்த காலத்தில் இப்போதைய எம்பிபிஎஸ் படிப்புக்கு நிகரான மவுசு இன்ஜினியரிங் படிப்புக்கும் இருந்தது. படித்த உடன் வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
குறிப்பாக 1990 மற்றும் 2000களில் தகவல் தொழில்நுட்ப துறையின் அசுர வளர்ச்சி காரணமாக என்ஜினியரிங் படிப்புக்கு மவுசு உச்சத்துக்கு போனது. குறிப்பாக சாப்ட்வேர் என்ஜினியர், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியர், ஏரோநாட்டிக்கல் என்ஜினியர், மெக்கானிக்கல் என்ஜினியர், சிவில் என்ஜினியர் என எல்லா படிப்புகளுக்கு மிகவும் மவுசு ஏறியது.
2லட்சம் பேர் படித்து வெளியேறினர்
இதனால் புற்றீசல் போல் 2000களில் பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் முளைத்தன இதன் விளைவாக ஆண்டுக்கு 2லட்சம் பேர் என்ஜினியரிங் படித்துவிட்டு தமிழகத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் எல்லாம் சில காலம் தான். 2007ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட மந்த நிலை அந்த துறையை அசைத்து பார்த்தது. அதன்பிறகு இரண்டு வருடங்கள் மிகப்பெரிய வீழ்ச்சி தகவல் தொழில்நுட்ப துறையில் நிலவியது. இதனால் ஏராளமானோர் வேலைகளை இழந்தனர்.
கலை படிப்பில் ஆர்வம்
அதன்பின்னர் தற்போது ஓரளவு மீண்டாலும், மற்ற துறைகளில் நிலவும் சுணக்கம் காரணமாகவும், வேலை வாய்ப்பு உறுதி என்கிற நிலை இல்லாத காரணத்தாலும் என்ஜினியர் ஆகும் ஆசையை பலரும் மாற்றிக்கொண்டனர். என்ஜினியரிங் படித்து முடிக்கும் பலருக்கு வேலைக்கு ஏற்ற திறன் இல்லை என்றும், ஆங்கில மொழி அறிவு போதிய அளவு இல்லை என்றும் கூறி வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் என்ஜினியர்களை வேலைக்கு எடுப்பதில்லை. ஆனால் கலை அறிவியல் படிப்பு படித்தவர்களை வேலைக்கு எடுப்பதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன
79 ஆயிரம் இடங்களே நிரம்பின
இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் என்ஜினியரிங் கல்லூரிகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. நேற்று தமிழகத்தில் என்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்துவிட்ட நிலையில், 92 ஆயிரம் காலி இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் 79 ஆயிரத்து 700 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளது.
என்ஜினியரிங் படிப்புக்கு கொடுமை
இந்நிலையில் அண்மையில் ஒரு பள்ளியில் பெற்றோர் மீட்டிங் நடந்தது. அப்போது 200க்கும் மேற்பட்ட சிறுகுழந்தைகளின் பெற்றோர் பங்கேற்றனர். அதில் என்ஜினியர் படிக்க வைக்க உங்களில் எத்தனை பேருக்கு ஆசை என பள்ளியின் முதல்வர் அவர்களிடம் கேட்டார். அதற்கு 200 பேரில் ஒருவர் மட்டுமே கைதூக்கி அதிர்ச்சி அடைய வைத்தனர். அதேநேரம் டாக்டர், ஐஏஎஸ், ஐபிஎஸ், காவல்துறை, ராணுவம் மற்றும் விவசாயியாக்க அதிகம் பேர் கை தூக்கியிருந்தனர். இதுதான் என்ஜினியரிங் தொடர்பான மக்களின் பார்வையா என்று சுற்றியிருந்த பெற்றோர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.