இந்திரஜித், அபிமன்யு போன்றவர் பரிதி இளம்வழுதி என்பார் கருணாநிதி.. ஸ்டாலின் புகழாரம்
Recommended Video
சென்னை: முன்னாள் அமைச்சரும், 2013 வரை திமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான பரிதி இளம்வழுதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. இவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை, பெசன்ட்நகரிலுள்ள பரிதி இளம்வழுதி உடலுக்கு, ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதன்பிறகு நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
பரிதி இளம்வழுதி மறைவு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் ஆரம்ப காலத்தில் இருந்தே இளைஞர் அணிக்காக உழைத்தவர்.
சிறைவாசம்
என்னோடு பல போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைக்கு சென்று வந்தவர். 6 முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டசபையிலும், அவரை தேர்ந்தெடுத்த தொகுதியிலும் சிறப்பாக பணியாற்றியவர்.
வீர அபிமன்யு, இந்திரஜித்
கருணாநிதி ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர். கருணாநிதியால், இந்திரஜித், வீர அபிமன்யு என்றும் பாராட்டை பெற்றவர் பரிதி இளம்வழுதி. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், அரசியல் சூழ்நிலை அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக தடுமாறிய காலகட்டங்களில் கூட, கருணாநிதி அவர் மீது வைத்திருந்த அன்பை நாங்கள் மறக்க மாட்டோம்.
இரங்கல்
எனவே, பரிதி இளம்வழுதி மறைவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். பரிதி குடும்பத்திற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்திரஜித், அபிமன்யு யார்
இந்திரஜித் ராமாயண கதாப்பாத்திரமாகும். ராவணனின் மகனான இந்திரஜித், போர்க்களத்தில் ராமருக்கு எதிராக பல ஜாலங்கள் புரிந்தவர். அபிமன்யு, மகாபாரத கதாப்பாத்திரம். அவர், தனது தந்தை அர்ஜுனனுடன், களம் புகுந்து வீரத்தோடு போர்புரிந்தாலும், திட்டமிட்டு சக்கர வியூகத்தில் சிக்க வைக்கப்பட்டு கொல்லப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.