தமிழக கோயில்களில் அரசு அங்கீகாரமின்றி பார்கிங் கட்டணம் வசூல்.! கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், உரிய அரசு அங்கீகாரமன்றி பார்கிங் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயில் நுழைவாயில்களில் அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே வாகனங்களை நிறுத்துவதற்கு, கட்டணம் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திலுள்ள பவானி அம்மன் கோயில் அறங்காவலர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தங்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களிடமிருந்து, எவ்வித அனுமதியுமின்றி மாயாண்டி என்பவர் சட்டவிரோதமாக பார்கிங் கட்டணம் வசூலித்து வருவதாக புகார் கூறியிருந்தார்.
எனவே அரசு அனுமதியின்றி பார்கிங் கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசிடம் உரிய அனுமதியோ அங்கீகாரமோ பெறாமல் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என தடை விதித்துள்ளது.
மேலும் தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில், சட்ட விரோதமாக நுழைவுக் கட்டணமோ அல்லது வாகனம் நிறுத்துமிட கட்டணமோ வசூலிக்க கூடாது.
இதற்கு தடை உத்தரவு பிறப்பித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் அடுத்த 30 நாட்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அறநிலையத்துறை கோயில்கள் அமைந்துள்ள ஊர்களில் இருக்கும் சுற்றுலா தள பகுதிகளில் நுழையும் போது, யார் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற அறிக்கையை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தவிர சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பவர்கள் யார் யார் என கண்டறிந்து, காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை அனுப்ப வேண்டும்.
அவ்வாறு அனுப்பப்படும் அறிக்கை கிடைத்தவுடன் விதி மீறி கட்டணம் வசூலித்த நபர்கள் மீது, சிவில் மற்றும் குற்றப் பிரிவுகளின் கீழ் காவல்துறை எடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரசு அங்கீகாரம் பெற்றவர்களால் வசூலிக்கப்படும் நுழைவு மற்றும் பார்கிங் கட்டணத்தை, அப்பகுதி மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.