அப்போ.. துக்ளக் அடுத்த இதழ் 'சேல்ஸ்' பிச்சிக்குமோ.. குருமூர்த்தி வெளியிட்ட ஒரு 'முக்கிய' அறிவிப்பு
சென்னை: ரஜினிகாந்த் பேசியதால் மறுபடியும் சர்ச்சைக்குள்ளாகி உள்ள 1971 ஆம் ஆண்டு சேலம் நகரில், பெரியார் நடத்திய ஊர்வலம் தொடர்பான செய்தியை வரும் இதழில் மறுபிரசுரம் செய்ய உள்ளோம் என்று, அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ராமர் மற்றும் சீதை படங்கள் பெரியார் நடத்திய ஊர்வலத்தில், செருப்பால் அடிக்கப்பட்டதாக, ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
அவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று பெரியாரிய இயக்கங்கள் தெரிவித்து வருகின்றன.
நிர்வாணமாக ராமர் சிலை....இந்து ஏடு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதையும் ரஜினி தெரிஞ்சுக்கனும்!
50 ரூபாய்
அதேநேரம், இது தொடர்பான செய்தி வெளியிட்டதற்காக துக்ளக் இதழ் விற்பனை அப்போதைய திமுக ஆட்சியால் முடக்கப்பட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். கள்ளச்சந்தையில் துக்ளக் இதழை வாசகர்கள் படிக்கும் அளவுக்கு ஆர்வம் அதிகரித்ததாகவும், எனவே ஒரு இதழ் 50 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆனதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
ஆர்வம்
இந்த நிலையில்தான், அந்த துக்ளக் இதழில், அப்படி என்னதான் இந்த சம்பவம் தொடர்பாக செய்தி வெளியாகி இருந்தது? மற்றும் என்ன புகைப்படம் வெளியாகி இருந்தது? என்பதை அறிந்து கொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிந்தது. சமூக வலைதளங்களில் அந்த இதழை மறுபடியும் மறுபிரசுரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன.
|
குருமூர்த்தி அறிவிப்பு
இந்த நிலையில், இதுபற்றி குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பல துக்ளக் வாசகர்கள் திகவின் 1971 சேலம் ஹிந்து கடவுள் அவமதிப்பு ஊர்வலம் பற்றி வந்த துக்ளக் இதழை மறுபடி வெளியிடும்படி கேட்டிருக்கிறார்கள். அந்த முழு இதழும் அவசியமில்லை. அதில் வந்த சேலம் பற்றிய விவரங்களை மட்டும் வருகிற இதழில் கொடுக்க நினைக்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலவச விளம்பரம்
துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், திமுக ஆட்சியில் துக்ளக் பத்திரிகைக்கு எதிராக அடக்குமுறை கையாளப்பட்டது.., எனவே துக்ளக், வெகு பிரபலமாக மக்களிடம் சென்று சேர்ந்ததால், தனது விளம்பர பிரதிநிதி போல கருணாநிதி செயல்பட்டார் என்று சோ கிண்டலாக குறிப்பிட்டார் என்று தெரிவித்திருந்தார். சோ ராமசாமி மறைவிற்குப் பிறகு துக்ளக் விற்பனை சரிவடைந்து வந்ததாக சிலர் கூறுகிறார்கள். இந்த நிலையில்தான், ரஜினிகாந்த் தயவால் மீண்டும் துக்ளக் பற்றிய பேச்சு பொதுவெளியில் அதிகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த செய்தி தொடர்பாக மறுபடியும் மறுபிரசுரம் செய்ய துக்ளக் முன்வந்திருப்பதால் அடுத்த இதழ் கண்டிப்பாக அமோக விற்பனை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.