உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் பதவி எப்போது?... ஜெ.அன்பழகன் பதில்
Recommended Video
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது குறித்து கட்சித் தலைமை அவசரப்படாது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூறியுள்ளார்.
திமுகவில் தலைவர் பதவிக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் பெற்றது, இளைஞர் அணி தான். அந்த அணியின் செயலாளராக நீண்ட காலம் இருந்த மு.க.ஸ்டாலினுக்கு பிறகு சாமிநாதன் பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டுமென்று தூத்துக்குடி, திருச்சி மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதே போல், கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற திமுக புதிய எம்.பி.க்கள் கூட்டத்திலும் உதயநிதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டுமென திமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
கிச்சன் கேபினட் மூலம் ராஜ்யசபா எம்.பியாக துடிக்கும் திமுக வக்கீல்
கருணாநிதியின் பிறந்த நாள் விழா
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட திமுக சார்பில் தி.நகரில் இரத்ததான முகாம் நடைபெற்றது. திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். முகாமில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொண்டார்.
திமுக விடுதலையாகும்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.அன்பழகன், சிபிஐ தனி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட 2 ஜி வழக்கை, மத்திய அரசு தற்போது கையில் எடுத்துள்ளது. எந்த வகையில் விசாரித்தாலும் 2 ஜி வழக்கில் இருந்து திமுக விடுதலையாகும் என்றார்.
தலைமை அவசரப்படாது
மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது குறித்து தலைமை அவசரப்படாது எனவும் இதுபோன்ற தகவல்கள் ஊடகங்களே பெரிது படுத்துவதாக அன்பழகன் தெரிவித்தார். 8 வழிச்சாலை தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள மத்திய மாநில அரசுகள் குறித்து கூட்டணியில் உள்ள அன்புமணி ராமதாஸ் தற்போது என்ன சொல்ல போகிறார் என்று அன்பழகன் கேள்வி எழுப்பினார். மேலும் 8 வழிச்சாலையை மக்களோடு இணைந்து திமுகவும் எதிர்க்குமென்று தெரிவித்தார்.
கமல்ஹாசன் குறித்து விமர்சனம்
மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்துள்ள வாக்குகள் பெரிய வாக்கு சதவீதம் இல்லை என்றும் கூறிய ஜெ. அன்பழகன், மக்களுக்காக உழைக்கக்கூடிய தலைவர் கமல்ஹாசன் இல்லை என்பது அவரது செயலில் இருந்து தெரிவதாக தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பொறுப்பு
உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது குறித்து கட்சித் தலைமை அவசரப்படாது என்று ஜெ.அன்பழகன் கூறியிருக்கும் அதே நேரத்தில், உதயநிதியின் நடவடிக்கையை பொறுத்து எதிர்காலத்தில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று திமுக எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.