Exclusive: சாலை வரி கட்டிய பேருந்துகளை.. சும்மா நிறுத்த முடியாது.. பர்வீன் டிராவல்ஸ் அதிபர் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் இரவுகளில் மட்டுமே பெரும்பாலும் இயக்கக்கூடிய ஆம்னி பேருந்துகளின் நிலை குறித்து அறிவதற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் முகமது அஃப்சலிடம் பேசினோம்.
அப்போது கூறிய அவர் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் கூட பொதுமக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவையாக கருதி ஆம்னி பேருந்துகளை பகலில் மட்டும் இயக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அதன் விவரம் பின்வருமாறு;
கேள்வி: கொரோனா கட்டுப்பாடுகள்-இரவு நேர ஊரடங்கை எப்படி பார்க்கிறீர்கள்..?
பதில்: கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவது உண்மை தான். அதே நேரத்தில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் பெரியளவு தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் இயல்பாகவே ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நேரங்களில் மக்கள் வீடுகளில் தான் இருப்பார்கள். இன்னும் ஏதேனும் மாற்றுவழிகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். குறிப்பாக எங்களை போன்ற ஆம்னி பேருந்துகளை வைத்து இயக்குபவர்களுக்கு பொருளாதார நெருக்கடியை கூட்டும்.
கேள்வி: ஆம்னி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக உங்கள் சங்கத்திலேயே மாறுபட்ட கருத்து நிலவுகிறதே..?
பதில்: ஒன்றை புரிந்துகொள்ளுங்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்பது இங்கு ஒன்று தான் செயல்படுகிறது. அதன் தலைவராக நான் தான் இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் மற்ற சங்கம் என்பது டூர் ஆப்ரேட்டர்ஸ், முகவர்கள், டிக்கெட் புரோக்கர்கள் என ஆம்னி பேருந்து தொழிலுடன் தொடர்புடையவர்கள் உறுப்பினர்களாக இருப்பது. அதனால் ஒன்றுடன் ஒன்றை சேர்த்து குழப்பிக் கொள்ளாதீர்கள். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க முடிவின் படி பொதுமக்கள் நலன் கருதி ஆம்னி பேருந்துகள் பகலில் இயக்கப்படும்.
கேள்வி: பகலில் மட்டும் பேருந்துகளை இயக்கினால்- உங்களுக்கு ஏற்படும் செலவினங்கள் கட்டுப்படியாகுமா..?
பதில்: நிச்சயம் இழப்பு தான் ஏற்படும். ஆனால் அதற்காக ஆம்னி பேருந்துகளை சும்மா நிறுத்தி வைக்க முடியாது. அனைவரும் சாலை வரி கட்டியிருக்கிறோம், இன்சூரன்ஸ் கட்டியிருக்கிறோம், வங்கியில் ஈ.எம்.ஐ. கட்ட வேண்டும். இப்படி பல காரணங்கள் இருப்பதால் பேருந்துகளை இயக்காமல் சும்மா நிறுத்த முடியாது. முடிந்தவரை இழப்பு ஏற்படாத வகையில் ரூட் மேப் அமைக்கப்பட்டு பேருந்துகளை இயக்க முயற்சி செய்வோம்.
கேள்வி: ஒன்றிரண்டு பேருந்துகளை வைத்து இயக்கும் நிறுவனங்களின் நிலை என்னவாகும்..?
பதில்: முன்பே கூறியது போல், பெரிய கஷ்டம் தான். ஏனென்றால் பொதுமக்களின் நகர்வுகள் குறைவதை எங்களால் உணர முடிகிறது. பெரிய நிறுவனங்களே ஸ்தம்பிக்கும் போது நீங்கள் கேட்கும் அவர்களது நிலை கடினமாக தான் இருக்கும்.
கேள்வி: ஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கான பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன?
பதில்: ஏற்கனவே அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் முறையாக பின்பற்றப்படும். அதோடு தூய்மை பராமரிக்கப்பட்டு சுகாதாரம் முறையாக பேணப்படும்.