ஒரு ஹார்ன் அடிச்சது குத்தமாயா? ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடியில் வாக்குவாதம்.. டிராபிக் ஜாம்!
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்க சாவடியில் அரசு பேருந்து ஓட்டுனருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால், 30 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருமந்தூர் என்ற பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. 6 வழி கொண்ட சுங்கச்சாவடியில் இன்று மதியம் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு வரிசையில் அரசு பேருந்திற்கு முன் லாரி ஓட்டுநர்கள் வரிசையாக நின்று கட்டணம் செலுத்தி கொண்டிருந்தனர்.
இதனையடுத்து, அரசு பேருந்து ஓட்டுனர் ஒலிப்பான் மூலம் ஒலி எழுப்பி கொண்டிருந்தார். இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், ஓட்டுனருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
அப்போது, அவ்வழியாக வந்த அனைத்து அரசு பேருந்துகளின் ஓட்டுனர்களும் வாகனத்தை ஆங்காங்கே நிறுத்தி விட்டு, சுங்கச்சாவடியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த, காவல்துறையினர், விசாரணை நடத்தி இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். பின்னர், 30 நிமிடங்களுக்கு பிறகு போக்குவரத்து சரிசெய்யபட்டது. இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.