மலேசியாவின் பாமாயிலுக்கு தடை.. "நாங்க இருக்கோம்".. பணத்தை அள்ள போகும் பதஞ்சலி, அதானி குரூப்!
பதஞ்சலி, அதானி எண்ணெய் நிறுவனங்களுக்கு பலன் கிடைக்கும் என தெரிகிறது
சென்னை: "ஏன்தான் காஷ்மீர் விவகாரத்துக்கு வாயை திறந்தோம்" என்று மலேசிய பிரதமர் மனசுக்குள் வருத்தப்படுவார் போல தெரிகிறது.. உங்க சங்காத்தமே எங்களுக்கு வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்து மலேசியாவில் இருந்து பாமாயிலை இறக்க தடை விதித்துவிட்டது.. ஆனால் இதன் பலனை அனுபவிக்கப் போவது அதானி, பதஞ்சலி நிறுவனங்கள்தான். கொழுத்த லாபம் இவர்களுக்குக் கிடைக்கப் போகுதாம்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்தும், குடியுரிமை திருத்தச் சட்ட நடவடிக்கை குறித்தும் மலேசிய பிரதமர் மகாதிர் பின் முகமது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
இஸ்லாமியருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது நியாயமல்ல என்று பகிரங்கமாகவே தனது கருத்தை சொல்ல... கடைசியில் அந்த பேச்சு இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. இதெல்லாம் போதாதென்று, டைரக்டாக ஐநா பொதுக்கூட்டத்திலும் போய் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிவிட்டு வந்தார்.
சீனாவுடன் நட்பு.. இந்தியாவுடன் சண்டை.. திடீரென்று மோதும் அமெரிக்கா.. வர்த்தக போர் மூளும் அபாயம்!
மலேசியா
அதனால், மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வர்த்தகர்களுக்கு இந்திய அரசு கடிவாளம் போட.. இறக்குமதியாகும் பாமாயிலுக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.. இதுதான் மலேசியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஏனென்றால், உலக அளவில் பாமாயில் உற்பத்தி செய்வதில் மலேசியாதான் 2-வது இடத்தில் உள்ளது... இந்தியாவுக்கு தேவையான பாமாயில் 75 சதவிகிதம் மலேஷியாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இப்போது, வேறு நாடுகளை ஏற்றுமதிக்காக நாட வேண்டிய நிலையில் தற்போது மலேசியா உள்ளது.
ரீபைன்ட் பாமாயில்
"மலேசியா ஒரு சின்ன நாடு... இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் அளவுக்கான நாடு கிடையாது' என்று என்னதான் மலேசிய பிரதமர் விளக்கம் தந்தாலும், அது இனி எடுபடுமா என்பது சந்தேகம்தான்.. ஏனென்றால் மத்திய அரசு, ரீபைன்ட் பாமாயில் இறக்குமதி கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சமையலுக்கு நிறைய எண்ணெய் பயன்படுத்துகிறோம்.. அதற்கான எண்ணெய் நிறுவனங்களும் இங்கு நிறைய இருந்தாலும், மலேசிய பாமாயில் எண்ணெய்தான் விலை குறைவாக இருப்பதாக கூறி இதுவரை வர்த்தகர்கள் இறக்குமதி செய்து வந்தனர்.. இதனால் நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டன.
பதஞ்சலி
இந்தியாவை பொறுத்தவரை அதானி வில்மார், கோகுல் அக்ரா ரிசோர்சஸ், போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் சமையல் எண்ணெயை உற்பத்தி செய்து வருகிறது.. இந்த முக்கிய புள்ளிகள் போதாதென்று பாபா ராம்தேவின் பதஞ்சலியும் களத்தில் குதித்துவிட்டது.. பதஞ்சலி ஆயுர்வேத் சமீபத்தில் ருசி சோயா என்ற நிறுவனத்தை விலைக்கு வாங்கிவிட்டது. இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் எல்லாமே தாங்கள் தயாரிக்கும் எண்ணெயை சுத்திகரிப்பு செய்து அதன்பின்பு விற்பனை செய்கின்றன.
எண்ணெய் நிறுவனங்கள்
ஆனால் நமக்கு இதுவரை மலேசியாவில் இருந்த வந்த கச்சா பாமாயில் சுத்திகரிக்கப்படாதது.. அதனால் எப்படியும் இந்த நிறுவனங்கள் மலேசியாவில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி.. சுத்திகரித்து.. அதற்கு பிறகு நமக்கு விற்கும் என தெரிகிறது.. அப்படியானால் இந்த எண்ணெய் நிறுவனங்களுக்குதான் நல்ல லாபம் கிடைக்கும் என்கிறார்கள்.
நல்ல கிராக்கி
குறிப்பாக அதானி வில்மர்தான் பெரிய அளவில் எண்ணெய்யை தயாரித்து வருகிறது.. சோயா எண்ணெய், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.. இப்போதைக்கு மலேசியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி தடை என்பதால், அதானி பக்கம் காற்று பலமாக அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. அதுபோலவே பதஞ்சலி, இமாமி நிறுவனங்களுக்கும் நல்ல கிராக்கி ஏற்படும் என்கிறார்கள்.
யாரோ பிழைக்க.. யார் யாரையோ தூக்கியடிக்க வேண்டியிருக்கு பாருங்க!