சுப்ரீம் ஸ்டார் முதல் சூப்பர் ஸ்டார் வரை.. பாமகவின் ‘நடிகர்’ அரசியல்! ஒருத்தரையும் விட்டு வைக்கல!
சென்னை : ஆன்லைன் விளம்பரங்களை நடித்து வருவதை நடிகர் சரத்குமார் நிறுத்த வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த விவகாரத்தில் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளார். முன்னதாக புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நடிகர் விஜய், ரஜினி, சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை கடுமையாக பாமக எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி ஏராளமானோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் ரம்மியை ஒழிக்க தமிழக அரசு சார்பில் குழு அமைப்பட்டு தற்போது அந்த குழுவும் தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக, பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
நீங்க நடிகர் மட்டும் இல்ல..கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கங்க சரத்குமார்..விளாசிய நெட்டிசன்ஸ்! என்னாச்சு?
பாட்டாளி மக்கள் கட்சி
அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டும் என பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான் முதல் தமிழகத்தில் தமன்னா, மனோபாலா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் ஆன்லைனில் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். குறிப்பாக அரசியலில் இருக்கும் நடிகர் சரத்குமார் உயிர்பறிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கலாமா என கேள்வி எழுப்பி வரும் பலரும், அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனருமான சரத்குமாரை நேரடியாகவே கண்டித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்," சரத்குமார் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களுக்கும் என்னுடைய அன்பான வேண்டுகோள். ஆன்லைன் சூதாட்டம் என்பது பல ஆயிரக்கணக்கான குடும்பங்களை அழித்திருக்கிறது. அதனால் இதற்கு எந்த விளம்பரமும் கொடுக்கக் கூடாது." என கூறியிருந்தனர். இதனையடுத்து பாமகவினர் நேரடியாக சரத்குமாரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
நடிகர்கள் எதிர்ப்பு
தற்போது மட்டுமல்ல பல ஆண்டுகளுக்கும் முன்னரே நடிகர்களுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து இருக்கிறது பாமக. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சூர்யா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அப்படி என்ன செய்தார்கள்? போராட்டம் நடத்த என்ன காரணம் என்பது குறித்து பார்க்கலாம். பொதுவாக புகை மது போன்ற காட்சிகளில் நடித்தாலும், வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தியதாக பாமகவின் போராட்டங்கள் அமைந்திருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த்
பாபா படத்தில் இருந்து அதாவது 2000ஆம் ஆண்டில் இருந்தே பாட்டாளி மக்கள் கட்சிக்கும் நடிகர் ரஜினிகாந்த் மோதல் இருந்திருக்கிறது. கர்நாடகாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய நடிகர் ரஜினிகாந்த் வீரப்பனை கொல்ல வேண்டும் என்று பேசியதாக பாமகவினரும் வன்னியர் சங்கமும் முதன் முதலாக களம் இறங்கின. தொடர்ந்து இந்த மோதல் பாபா படத்தில் வெடித்தது. பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கையில் சிகரெட் இருந்ததை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரான ராமதாஸ் கடுமையாக எதிர்த்ததோடு இளைஞர்களை அவர் கெடுக்கிறார் எனவும் இதற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டது. அப்போது பாமகவினரும் ரஜினி ரசிகர்களும் நேரடியாக மோதிக் கொண்டனர். தொடர்ந்து காவிரி பிரச்சனை, பெரியார் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ரஜினிக்கு எதிராகவே பாமக இருந்திருக்கிறது. அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அன்புமணி ராமதாஸ் - ரஜினி இடையே ஒரு நல்ல நட்பு இருப்பதையும் பார்க்க முடிகிறது..
தளபதி விஜய்
ரஜினிக்கு அடுத்தபடியாக பெரிய நடிகரான விஜய் சர்க்கார் படத்தில் நடித்த போது பாமகவுக்கும் நடிகர் விஜய்க்கும் நேரடியாக மோதல் இருந்தது. சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததாக பசுமை தாயகம் அமைப்பு புகார் கொடுத்தது. இதை அடுத்து பொது சுகாதார துறையானது சர்க்கார் படம் குழுவுக்கு நோட்டீஸ் அளித்த நிலையில் அதனை திரும்பப் பெறுவதாக படக்குழு அறிவித்தது. இதனால் விஜய் ரசிகர்கள் பாமகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்க விஜய் ரசிகர்களுக்கு எதிராக பாமகவினர் களத்தில் இறங்கினர். இதற்கு முன்னதாக அழகிய தமிழ் மகன் திரைப்படத்திலும் நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சி நடித்த பாமக தற்போதைய தலைவரான அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.
நடிகர் சூர்யா
தற்போது நிலையில் மிகவும் பிசியாக இருக்கும் தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவுக்கு எதிராக தீவிரமாக இருந்தது பாமக. அவர் நடித்த ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூக மக்களின் சின்னமாக கருதப்படும் அக்னி கலசத்தை காவல் சார்பு ஆய்வாளரின் வீட்டில் வைத்து அவர் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என உருவகப்படுத்த நினைப்பதாக கூறி பாமக நேரடியாக போராட்டத்தில் இறங்கியது. இது தொடர்பாக அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் தற்போது நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் விருமன் படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தனிப்பட்ட காரணங்களுக்கு இல்லாமல் இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிக்கும் நடிகர்களை எதிர்த்து பாமக அரசியல் செய்து வந்திருக்கின்றது என்கின்ற பாமகவினர்.