தனி ஒருவன்.. யார் இந்த காவலர் பிரசாந்த்.. குவியும் பாராட்டு? என்ன செய்தார்?
சென்னை: வாடகை காரை கடத்தியவர்களை, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் காவலர் பிரசாந்த் விரட்டிப் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அவரை பலரும் பாராட்டி வரும் நிலையில் குற்ற புலனாய்வு பிரிவு எஸ்பி அர்ஜூன் சரவணன் வெகுவாக பாராட்டி உள்ளார்.
Recommended Video
உடன் உதவ யாருமில்லை, கையில் ஆயுதம் எதுவுமில்லை, இருந்தது நெஞ்சுரம் மட்டுமே, வாழ்த்துக்கள் பிரசாந்த் என்று தனது ட்விட்டர் பதிவில் எஸ்பி அர்ஜூன் சரவணன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் எல்லீஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் வேல்பாண்டி. இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தில் வாடகைக்குக் கார் ஒன்றை எடுத்து உள்ளனர். இந்நிலையில் வாடகைக்கு எடுத்த காரின் ஓட்டுநரை தாக்கிவிட்டு, இருவரும் அந்த காரை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருட்டு பைக்கிற்கு திருட்டு பெட்ரோல்.. கையும் களவுமாக பிடித்த மக்கள்.. தர்ம அடி வாங்கிய மகேந்திரன்
எப்படி கடத்தினார்கள்
என்ன நடந்தது? காஞ்சிபுரத்தில் இருந்து புறவழிச்சாலை வழியே அந்த கார் சென்று கொண்டிருந்தது. அப்போது வெங்கடேசன் மற்றும் வேல்பாண்டி இருவரும் ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். திடீரென இருவரும் சேர்ந்து கொண்டு தாக்கியதில் ஓட்டுநர் நிலைகுலைந்து போய்விட்டார். பின்னரே ஓட்டுநரைச் சாலையில் தள்ளிவிட்ட இருவரும் காரை கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து ஓட்டுநர் உடனடியாக காரின் உரிமையாளர் பிராகாஷ்குமாருக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டைக்கும் அலார்ட்
கார் கடத்தப்பட்ட தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த கார் உரிமையாளர் பிரகாஷ்குமார் உடனடியாக இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்குக் கடத்தப்பட்ட கார் குறித்து தகவல்களை அனுப்பி உள்ளார். அதன்படி நேற்று மாலை பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமல கண்ணனுக்கும் இந்த தகவல் கிடைத்துள்ளது
குற்றவாளிகள் ஓட்டம்
பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலம் கண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு மருந்து வாங்க அவரது ஜீப் ஓட்டுநர் காவலர் பிரசாந்த் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள மருந்துக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது கடத்தப்பட்ட கார் அங்கு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர் பிரசாந்த், இருவரையும் துரத்திச் சென்றுள்ளார். காவலர் தங்களைத் துரத்தி வருவதைப் பார்த்த குற்றவாளிகள் அவரை தாக்கி தள்ளிவிட்டு, தப்பி ஓடி உள்ளனர்.
மடக்கி பிடித்தார்
குற்றவாளி தாக்கியதில் கீழே விழுந்ததில் காவலர் பிரசாந்த்தின் கைகளில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், விடாமல் குற்றவாளிகளைத் துரத்திச் சென்ற காவலர் பிரசாந்த், அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர்களின் உதவியுடன் தப்பி ஓடிய வேல்பாண்டி என்பவரை மடக்கிப்பிடித்தனர். இருப்பினும் மற்றொரு குற்றவாளியான வெங்கடேசன் தப்பி ஓடி விட்டார்.
சிசிடிவி காட்சிகள்
கடத்தப்பட்ட காரை கைப்பற்றிய போலீசார், கடத்தலில் தொடர்புடைய வேல்பாண்டி என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, விசாரித்து வருகிறார்கள். மேலும் கடத்தப்பட்ட காரில் இருந்து அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் 3 மொபைலையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் காவலர் பிரசாந்த்தைக் குற்றவாளிகள் தாக்கிவிட்டுத் தப்பியோடுவது, அவர்களை விடாமல் பிரசாந்த் துரத்திச் சென்று பிடிப்பது ஆகிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
ட்விட்டரில் பாராட்டு
இதை பார்த்த பலரும் காவலர் பிரசாந்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை குற்ற புலனாய்வு பிரிவு எஸ்பி அர்ஜூன் சரவணன் வெகுவாக பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
"தனி ஒருவன்.
டிரைவரை தாக்கி டாக்சி கடத்தல்.
அலறிய மைக்கால் நம்பர் ஞாபகத்தில்
களவுபோன கார் கண்முன்னே.
உடன் உதவ யாருமில்லை
கையில் ஆயுதம் எதுவுமில்லை
இருந்தது நெஞ்சுரம் மட்டுமே
விழுந்தது நீ!
எழுந்தது தமிழக காவல்துறை!
வாழ்த்துகள் காவலர் பிரசாந்த்" என்று பாராட்டி உள்ளார். குற்ற புலனாய்வு பிரிவு எஸ்பி அர்ஜூன் சரவணன் மட்டுமல்ல, ஏராளமான காவல்துறை உயர் அதிகாரிகள் காவலர் பிரசாந்தை பாராட்டி வருகிறார்கள்.