ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: ஊர்க்காவல் படை வீரர்களுக்கு ஊதிய உயர்வும், பணிநிலைப்பும் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிவராஜா என்ற ஊர்க்காவல் படை வீரர், தமது பணிக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியம் போதாததால் குடும்பத்தை காப்பற்ற இயலவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, விஷமருந்தி தனது வாழ்வை முடித்து கொண்டார்.
இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராமதாஸ் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஊரைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் சிவராஜா, தமது சொந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
வறுமையின் உச்சத்தில் அந்த ஊர்க்காவல்படை வீரர் எடுத்த சோக முடிவு, எஞ்சியுள்ள ஊர்க்காவல்படையினருக்காவது குடும்பத்தை காப்பாற்றும் அளவுக்கு ஊதியம் கொடுங்கள் என்ற செய்தியைத் தான் வெளிப்படுத்துவதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். சிவராஜா 7 ஆண்டுகளாக ஊர்க்காவல் படையில் பணியாற்றியுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட மதிப்பூதியம் குடும்பத்தைக் காப்பாற்றும் அளவுக்கு இல்லாததால், தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
சிவராஜாவின் தற்கொலை முடிவு ஏற்று கொள்ள முடியாது என்றாலும், தற்கொலைக்காக அவர் கூறியுள்ள கருத்துகள் மிகவும் சரியாக உள்ளது. சிவராஜாவை பணியிலிருந்தும் வறுமையில் வாடும் ஊர்க்காவல்படை வீரர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக பார்க்க வேண்டும். ஊர்க்காவல்படையில் பணியாற்றும் இளைஞர்களுக்கு, காவல் துறைக்கு இணையாக வேலை இருக்கும். இருப்பினும் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமோ மிக சொற்பம்.
முன்பு ஊர்க்காவல் படையினருக்கு நாளொன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,800 சம்பளம் தரப்பட்டது. ஊதிய உயர்வு கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. இதன்மூலம் ஊர்க்காவல்படை வீரர்கள் அனுபவித்து வந்த பொருளாதார நெருக்கடிகள் அகலும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊதியத்தை நாளொன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்திய தமிழக அரசு, அவர்களின் அதிகாரப்பூர்வ பணி நாட்களை மாதத்திற்கு 25-லிருந்து 5 நாட்களாக குறைந்து விட்டது.
இச்செயலால் ஊர்க்காவல் படையினரின் தினக்கூலி 3 மடங்கு அதிகரித்தாலும் கூட மாத ஊதியம் ரூ.2,800 என்ற அளவைத் தாண்டாத அளவிற்கு தமிழக அரசு பார்த்து கொண்டுள்ளது. அதிகாரபூர்வ பணி 5 நாட்கள் என்றாலும், மாதத்தின் அனைத்து நாட்களும் ஊர்க்காவல் படையினர் வேலைக்கு வர வேண்டியிருக்கும். மாத ஊதியம் 2800 ரூபாயை வைத்துக் கொண்டு எவராலும் குடும்பம் நடத்தவோ, குழந்தைகளை வளர்த்தெடுத்து படிக்க வைக்கவோ முடியாது. அதனால் தான் சிவராஜா தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க உதவி செய்வதிலும், நெருக்கடி காலங்களில் உதவுவதிலும் ஊர்க்காவல் படையினரின் பங்கு ஈடு இணையற்றது. தமிகத்தில் 2,805 பெண்கள் உட்பட மொத்தம் 15,622 பேர் ஊர்க்காவல் படையில் பணியாற்றுகின்றனர். கடந்த 2015 ம் ஆண்டு வெள்ளத்தின் போதும், 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் ஊர்க்காவல் படையினர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை என பேரவையில் ஜெயலலிதாவே பாராட்டினார். அவர்களுக்கு மாதம் ரூ.2,800 மட்டும் ஊதியம் வழங்குவதை நியாயப்படுத்தவே முடியாது.
கேரளம், புதுவை மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு ரூ.18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஊர்க்காவல் படையினரை காவல்துறையின் அங்கமாக மாற்ற வேண்டும் என்பது தான் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை. உடனடியாக அக்கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், அவர்களை பணி நிலைப்பு செய்து, கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயித்து காலமுறை ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.