விஜய்க்கு இருக்கும் செல்வாக்குக்கு யாரையும் அசைக்க முடியும்... பழ. கருப்பையா தடாலடி!
Recommended Video
சென்னை : நடிகர் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவரால் அரசையே அசைத்துப் பார்க்க முடியும் என்று மூத்த அரசியல்வாதியும் சர்கார் திரைப்படத்தின் வில்லனுமான பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.
சர்கார் திரைப்படத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்த பழ.கருப்பையா தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் சர்கார் பற்றிய பல தகவல்களையும் நிகழ்கால அரசியலையும் தோலுரித்து காட்டி இருக்கிறார்.
பேட்டியில் அவர் கூறியதாவது, சர்கார் படத்தில் முதன்மை வில்லனாக நடிக்க முதலில் தயங்கினேன். சர்கார் முழுக்க முழுக்க அரசியல் படம், நிகழ்கால அரசியல் தான் அதில் இடம்பெற்றிருக்கிறது. திரைக்கதை மற்றும் வசனத்தை நன்கு யோசித்தே ஏ.ஆர்.முருகதாஸ் அமைத்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலின் பிரதிபலிப்பு தான் சர்கார்.
[மெளனக் குமுறலில் மதிமுகவினர்.. ஆஹா.. இந்த சர்கார் சர்ச்சையை மறந்துட்டீங்களே!]
நிகழ்கால அரசியலின் பிரதிபலிப்பு
அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை சர்கார் சொல்கிறது. நிகழ்கால அரசியல்வாதிகளை தோல் உரித்து காட்டுவதை முருகதாஸ் சிறப்பாக செய்துள்ளார். விஜயும் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்திப் போகிறவர்.
யோக்கியமானவர்கள் மந்திரி சபையில் இல்லை
பொதுவாழ்க்கையில் பொதுநலனுடன் இருப்பவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் குறைந்துவிட்டனர், 10 ஆண்டுகளாக இது மிகவும் மோசமாகத் தான் போயிருக்கிறது. யோக்கியமானவர்கள் யாரையுமே மந்திரி சபையில் பார்க்க முடியவில்லை, எப்படியாவது ஆட்சிக்கு வந்து பணக்காரராகி விட வேண்டும் என்பது தான் நிகழ்கால அரசியலில் நடக்கிறது. ஒரு பால்காரர் அரசியல்வாதியாகி ஆட்சி முடிந்து வெளியே செல்லும் போது கோடிக்கணக்கில் எப்படி சொத்து வைத்திருக்க முடிகிறது.
அதிமுக எதிர்ப்பதற்கு காரணம்
அதிமுகவின் பிரதிபலிப்பு அதிகம் இருக்கிறது என்று அவர்கள் கருதுவதால் தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். முதல்வரின் மகள் என்பதால் இடுப்பு வரை குனிந்து கும்பிடும் காட்சிகள் அவர்களை பாதித்திருக்கலாம்.
வியந்து போனேன்
ஜெயலலிதா இருந்திருந்தாலும் விஜயின் செல்வாக்கை அசைத்திருக்க முடியாது. எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது எனக்கு திரைத்துறையோடு அவ்வளவாக தொடர்பு இல்லை ஆனால் அவருக்கு இருக்கும் கிரேஸ் அப்படி இருக்கிறது. இளைஞர்களும், இளைஞிகளும் தவிக்கிறார்கள்.
அரசை அசைக்க முடியும்
இன்றைக்கு விஜய்க்கு இருக்கும் செல்வாக்கிற்கு அரசையே அசைக்க முடியும். ஒரு மனிதன் தனக்கு வரும் காலம் வரும் வரை பின்வாங்கி இருப்பது தவறில்லை, ஆனால் விஜய்க்கு இப்போது நல்ல மதிப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது என்றும் கருப்பையா தெரிவித்தார்.