கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்
சென்னை: ஓய்வு பெற்ற தலைமை காவலரின் மனைவி ஒருவர் தனது வீட்டில் 21 அடி ஆழத்தில் குழி தோண்டியதால் பரபரப்பு எழுந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் ஓய்வு பெற்ற தலைமை காவலர். இவரது மனைவி மைதிலி (43). இவரது வீட்டு வாசலில் இருந்து மூட்டை மூட்டையாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது வீட்டில் இரவு நேரத்தில் குழிதோண்டு சப்தம் கேட்பதாகவும் அக்கம்பக்கத்தினர் டிபி சத்திரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் 21 அடி ஆழத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
விசாரணை
அந்த பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மணல் மூட்டை கட்டி வெளியே வைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த மணல் ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து டிபி சத்திரம் போலீஸார் மைதிலியிடம் விசாரணை நடத்தினர்.
மந்திரவாதி
தன்னுடைய குடும்பத்தில் பல இழப்புகளை சந்தித்து வருகிறேன். கணவர் ராஜாவும் பக்கவாதத்தில் அவதிப்பட்டு வருகிறார். இதனால் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மந்திரவாதி சுரேஷை சந்தித்ததாக மைதிலி கூறியுள்ளார்.
மூடும் பணி
அந்த பள்ளத்தில் மாந்த்ரீக கயிறுகள், பொம்மை இருந்தது. அதை எடுத்து அழித்து விட்டனர். பின்னர் அந்த பள்ளத்தை மூடும் பணி நடைபெற்று வருவதாகவும் மைதிலி கூறியுள்ளார்.
வழக்கு இல்லை
இதையடுத்து அமைந்தகரை தாசில்தாருக்கு போலீஸார் புகார் கொடுத்தனர். பின்னர் மைதிலியிடம் கைப்பட எழுதி வாங்கிக் கொண்டு போலீஸார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.