யாரும் பயப்பட தேவையில்லை.. தீவிரவாதிகள் ஊடுருவல்.. பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னை கமிஷனர் தகவல்
சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: "யாரும் பயப்படாதீங்க.. காவல்துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது" என்று தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து சென்னை மாநகர கமிஷனர் விஸ்வநாதன் நம்பிக்கை அளித்துள்ளார். இதையடுத்து உச்சக்கட்ட பாதுகாப்பில் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு உள்ளே தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மொத்தம் 6 பேர் என்றும், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த இவர்கள், இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல்களை எல்லாம் உளவுத்துறை போலீசாருக்கு தந்து அலர்ட் செய்துள்ளது. இதனால் சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதுமே முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை, பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார்
இது சம்பந்தமாக அவர் சொல்லும்போது, "சென்னையில் பாதுகாப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. தீவிரவாத ஊடுருவல் தகவல் காரணமாக இரவு முதல் வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இந்த சோதனை நடந்ததுடன், தற்போதும் தொடர்கிறது. சென்னைக்கு மிக பலத்த பாதுகாப்பு போடும்படி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அசம்பாவிதம் எதுவும் நடந்திடாத வகையில் எல்லா பாதுகாப்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் அச்சம் கொள்ள தேவையில்லை" என்றார்.
இது சம்பந்தமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமாரும், தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வரும் தகவல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும், இந்த விவகாரத்தில் காவல்துறை போதுமான நடவடிக்கையை எடுத்து வருகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.