பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலை தூக்குகிறது... ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு
சென்னை: பிளாஸ்டிக் தடையை முழுமையாக முழுவீச்சில் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு நாளை (17-ந்தேதி) முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கும் முறை தீவிரமாக தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஜனவரி மாதம் முதல் தடை அமலுக்கு வந்தது.
50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பிளாஸ்டிக் ஒழிப்பை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு ஒரு முயற்சியாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பயன்பாடு குறையவில்லை
தொடக்கம் முதலே தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு எச்சரித்து வந்த போதிலும் அதன் பயன்பாடு குறையவில்லை. குறிப்பாக சாலையோர கடைகள், பழக்கடைகள், ஓட்டல்களில் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி, பறிமுதல் செய்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை.
கடும் நடவடிக்கை
இதையடுத்து, 50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 1 ம் தேதி முதல் தடை அமலுக்கு வந்தது. முதல்கட்டமாக, அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் செய்தால், தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் இன்றி கடை நடத்தினால், சீல் வைக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
மீண்டும் மஞ்சப்பை
வியாபாரிகளுக்கு மட்டும் அல்ல, பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவால், பொதுமக்களை மீண்டும் மஞ்சப்பை எனும் துணிப்பை பக்கம் திரும்ப வைத்தது. அதன் பிறகு, போதிய கண்காணிப்பு இல்லாததால், பிளாஸ்டிக் விற்பனை தலை தூக்க தொடங்கியது.
அபராதம் விதிப்பதில் 6 வகை
இந்தநிலையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பது 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.அதனை தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், வணிக ரீதியாக அதனை வாங்கி பயன்படுத்துபவர்கள், சிறிய கடைக்காரர்கள், கடைசியாக பொதுமக்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கும் வகையில், தனித் தனியாக அபராத கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் சோதனை
சென்னை மாநகர் முழுவதும் நாளை வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். கடந்த 6 மாதத்தில் சென்னையில் 240 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.