ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பு- பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாட்டம்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
Recommended Video
நாசகார நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் உச்சமாக 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 தமிழர்கள் மாண்டு போயினர்.
நெஞ்சை உறைய வைத்த இந்த படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் சட்டப் போராட்டங்களில் இறங்கியது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை- வேதாந்தா மனு டிஸ்மிஸ்: சென்னை உயர்நீதிமன்றம்
இதன் ஒருபகுதியாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என தீர்ப்பளித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வெளியான உடனே, பொதுமக்கள் பல இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த தீர்ப்பை சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.