வரலாற்று காவியத்துக்கு வயசு 20.. மறக்க முடியாத ஹே ராம்.. உச்சம் தொட்ட கமல்ஹாசன்!
சென்னை: படம் வெளிவந்து 20 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், "ஹேராம்" படத்தை உச்சமுகர்ந்து கொண்டாடி வருகின்றனர் கமல்ஹாசனின் ரசிகர்கள்... இந்த படத்துக்கு இயக்குனர் ஒரு புதுமுகம்தான்.. ஆனால், இந்திய பிரிவினையின் ரத்த வரலாற்றை நடுநிலையோடு கையாண்டு.. துணிந்து தந்திருந்தார் இயக்குனர் கமல்ஹாசன்!!
படம் வெளிவருவதற்கு முன்பேயே, இந்துத்துவா கொள்கையை கமல் தூக்கி பிடிக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நின்றன... மகாத்மா காந்தியை விமர்சிக்கிறார் என்று காங்கிரஸார் கொந்தளிக்கவும் செய்தனர்.. தியேட்டர் முன்பு போராட்டமும் செய்தனர்... ஆனால், உண்மையிலேயே இந்தியப் பிரிவினையை ஹே ராம் போல எந்த படமும் சொல்லியது இல்லை.. இந்திய சினிமாவிலேயே இது நிகழாத ஒன்று.. அதனால்தான் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.
படம் வெளியானவுடன் யாருக்கும் எதுவுமே புரியவில்லை.. சிலர் பாதி புரிந்து, புரியாமல் குழம்பி போய் தியேட்டரை விட்டு வெளியே வந்தனர்.. ஒரு சிலர் தங்களுக்கும் அந்த படத்துக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் அர்த்தம் பண்ணி கொண்டனர்... மேலும் பலர் தவறாகவே அர்த்தம் செய்து கொண்டனர்.
ஆர்எஸ்எஸ்
தொழில்நுட்பங்களாலும் சரி.. வரலாற்று வடிவமாகவும் சரி... இதற்கு உச்சக்கட்ட எடுத்துக்காட்டு, மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு கொண்டாடப்பட்டபோது, மீண்டும் மறுதிரையிடலுக்கு ஹேராம் திரையிடப்பட்டது தான் இயக்குனர் கமலுக்கு கிடைத்த அங்கீகாரம்... ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கமல் அதில் சுட்டிக் காட்டியிருப்பார்.. அதுவும் ஹிட்லரின் நாஜிப்படைகள்தான் ஆர்எஸ்எஸ் என்பதே கமலின் அழுத்தமான வாதமாக இருந்தது!!
பிடிவாதம்
படத்தில் ஒரு சீனில், தனது முஸ்லிம் நண்பனை பார்த்து இந்துவான கமல் "600 வருஷத்துக்கு முன்னாடி, இந்த நாட்டிற்கு வந்து நாட்டையே அழிச்சிட்டீங்க" என சொல்லுவார்.. அதற்கு அந்த முஸ்லிம் "நாங்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் தான் ஒத்துக்கிறோம்... ஆனால் நீ கும்பிடும் ராமர் சாமி மட்டும் எங்கிருந்து வந்தார்?என்று பதில் கேள்வி கேட்பார். இந்த வசனத்துக்கு அன்றைய காலகட்டத்தில் இந்து முன்னணி நடத்திய போராட்டம் அதிகம்.. வசனத்தை நீக்க வேண்டும் என்று இந்து முன்னணி வேண்டுகோள் வைக்க.. கமல் பிடிவாதமாக இருந்து நீக்கவே முடியாது என்றார்.
வழக்கு
ராமன் வெளிநாட்டவர் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று ஒரு வாதத்தை எடுத்து வைக்க... கடைசியில் ராமகோபாலன் கோர்ட் படியேறினார்.. இரு தரப்பு ஆதாரங்களையும் விசாரித்த நீதிபதி கமல் தரப்பில் உண்மை உள்ளது என்று சொல்லி, ராமகோபாலன் தொடுத்த வழக்கையும் தள்ளுபடி செய்தார். கமல் நினைத்த அதே காட்சிகளுடன்தான் படம் வெளியானது.. இப்படி ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு காட்சியையும் ஹே ராமில் குறிப்பிட்டு சொல்லலாம்.. அந்த அளவுக்கு ஒரு ஊற்று சுரங்கம் அது!
சம்பளம்
ஹேராமுக்கு முதலில் இசையமைத்தவர் எல்.சுப்பிரமணியம் என்பவர்.. இவர் அசாத்திய கலைஞர்.. ஆனாலும் சினிமாவுக்கு ஏத்த மாதிரி ரிக்கார்டிங் செய்ய வரவில்லை.. இதுபோக எடுத்த எடுப்பிலேயே ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது... கமலுக்கும் ஒத்துப்போகவில்லை.. அதனால் இளையராஜாவிடம் வந்து நின்றார்.
இளையராஜா
"பாட்டெல்லாம் ஷூட் பண்ணியாச்சு... ஆனா..." என்று நிலைமையை கமல் சொன்னவுடனேயே, புது ஐடியா தந்தார் இளையராஜா. "ஏற்கெனவே எழுதிய பாட்டு, விஷூவல் எதையும் மாத்த வேணாம்... அப்படியே இருக்கட்டும்... ஆனா, அந்த வரிகளுக்கும் சீன்களுக்கும் பொருத்தமான டியூனை நான் கம்போஸ் பண்ணி தர்றேன்.. அதுவே போதும்... திரும்ப ஷூட் பண்ண வேணாம்..." என்று கமலின் பதட்டம், பயம், குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்... கமலின் உழைப்பு, பணம், நாட்களையும் சேமித்து தந்தார்.
உலக சரித்திரம்
"ஹேராம்" படத்திற்கு இன்னொருவர் போட்டிருந்த இசையை அப்படியே நீக்கிவிட்டு வாய் அசைவுகளுக்கு ஏற்றபடி புது இசையினை அமைத்து... எல்லாரையும் திக்குமுக்காட செய்து பிரமிக்க வைத்தவர் இளையராஜா. இது ஒரு உலக சரித்திரம் என்றுகூட சொல்லலாம். இதற்கு முன்பு எந்த இசையமைப்பாளரும் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்ததே கிடையாது.. அதேபோல, "ஹேராம்" படத்தின் சவுண்ட் கூட லைவ் ரெக்கார்ட்தான்... ஒரு வரலாற்று படத்தில் இப்படி ஒலியை ரெக்கார்ட் செய்வது ரொம்பவும் ரிஸ்க் ஆன சமாச்சாரம்!!!
பணம் பொருட்டல்ல
ஆனால் கடைசியில் படம் என்னவோ வர்த்தக ரீதியான தோல்விதான்.. "பணம்தான் முக்கியம் என்றால் ஹேராம் எடுத்திருக்க மாட்டேன்.. நான் பெருமளவு பணத்தை இழந்திருக்கேன்.. ஆனால் அது ஒரு பொருட்டல்ல, திரும்ப பெற முடியாத ஒன்றுதான் இழப்பு.. தாயை இழப்பதுதான் இழப்பே தவிர பணம் உங்களால் திரும்ப பெற முடியும்" என்று கமலின் ஆணித்தரமான கருத்துக்களில்தான் எத்தனை பிடிமானம்!
படம் அல்ல.. பாடம்
மகாத்மா காந்தியின் கொள்கையை தூக்கி பிடித்த படம்தான் ஹேராம்.. இந்துத்துவா ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற படம் என்றபோதிலும், இந்துத்துவாவுக்கு ஆதரவாகவே உள்ளதாக பல விமர்சகர்களும் அப்போது ஹேராம் பற்றி கருத்து சொன்னார்கள்... அது உண்மை இல்லை.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால் மகாத்மா அளவுக்கு இந்து-முஸ்லிம் ஒற்றுமையை கமல் வலியுறுத்தினார் என்றே பெருமையாக சொல்லலாம்.. "ஹே ராம்" ஒரு படம் அல்ல... அது ஒரு பாடம்.. இன்னும் நூறு வருடத்துக்கு பேசப்படும் ஒரு சரித்திர சாதனை காவியமே!!