தங்க நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி.. சென்னை கேஎப்ஜே ஜுவல்லரி மீது குவியும் புகார்கள்
சென்னை: சென்னையில் இயங்கி வரும் கேரளா பேஷன் ஜூவல்லரி (கே.எப்.ஜே) தங்க நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி செய்ததாக பலரும் புகார் அளித்து வருகிறார்கள்.
கே.எப்.ஜே நிறுவனத்தின் கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்கள் பணம் திரும்ப கிடைக்காததால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை நாடி புகார் கூறி வருகிறார்கள்.
சென்னை மைலாப்பூர் மற்றும் அண்ணா நகர் ஆகிய இடங்களில் கேரளா பேஷன் ஜூவல்லரி (கே.எப்.ஜே) இயங்கி வருகிறது.
நகைக்கடைகளில் தங்க நகை சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் உள்ள பெரும் ஆபத்து.. சட்ட நிபுணர்
புதிய தங்கம்
இந்த நகைக்கடை, "உங்கள் நகைகளை அடகு வைக்க வேண்டாம் பழைய தங்க நகைக்கு பதிலாக புதிய நகைகள் தருகிறோம். வட்டி இல்லை ", சூப்பர் சலுகையுடன் தங்க நகைகள் சேமிப்பு திட்டம் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு மக்களை கவர்ந்தனர்.
மக்கள் ஏமாற்றம்
இதை நம்பி ஏராளமானோர் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தார்கள். ஆனால் முதிர்வு காலம் முடிந்தும் பலருக்கும் தங்க நகைகள் கைக்கு வந்து சேரவில்லை. பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பபட்டதை தாமதமாக உணர்ந்த மக்கள் பலரும் அந்த கடையை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்
திரும்ப வந்தது
இன்னொரு பக்கம் முற்றுகையிட்ட மக்களுக்கு அந்த நிறுவனம் காசோலைகளை வழங்கி இருக்கிறது. ஆனால் காசோலைகள் பணம் இல்லாமல் திரும்ப வந்ததையடுத்து ஏராளமான வாடிக்கையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
விசாரணை
10க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நேற்று கேஎப்ஜே நிறுவனம் தங்க நகை சேமிப்பு திட்டம் மூலம் தங்களை மோசடி செய்துவிட்டதாகபுகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நிறுவனர் ஏற்கனவே கைது
முன்னதாக கேஎப்ஜே நிறுவனம் விளம்பர நிறுவனத்திடம் 175 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில்அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சுனில் செரியன் சென்னை மத்திய பொருளதார குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 2018ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.