துரோகி vs அற்பபுத்திக்காரர்.. ஈவிகேஎஸ் இளங்கோவன், வைகோ கடும் வார்த்தை போர்.. அனல் பறக்கும் பேட்டிகள்
Recommended Video
சென்னை: இனத்தை அழித்த பாவி என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அவர் நம்பர் 1 துரோகி என்று காங்கிரசின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விளாசியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ்தான் முதல் குற்றவாளி என்று ராஜ்யசபாவில் சமீபத்தில் நடைபெற்ற விவாதத்தில் வைகோ பேசியிருந்தார். இது தற்போது தமிழகத்தில் பெரும் புயலாக மாறியுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் சொன்னதையும், வைகோ அதற்கு அளித்த பதிலடியையும் பாருங்கள்:
துரோகி
ஈவிகேஎஸ் இளங்கோவன்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தயவால்தான் வைகோ ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இன்னும் 15 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் நன்றி மறந்துவிட்டார். வைகோ அரசியல் அநாதையாக இருந்தார். காங்கிரஸ், திமுக கூட்டணியில் வைகோவை சேர்த்ததால்தான், கணேசமூர்த்தி என்ற லோக்சபா எம்பி மதிமுகவுக்கு கிடைத்துள்ளது. அமித்ஷா சொல்லிதான் காங்கிரசை விமர்சனம் செய்து ராஜ்யசபாவில் வைகோ பேசியுள்ளார். துரோகி நம்பர் 1 வைகோ, கொஞ்சம் நன்றியோடு நினைத்து பார்க்க வேண்டும்.
தவறான தகவல்
இதனிடையே, வைகோ அளித்த பேட்டியை பாருங்கள்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, காங்கிரசின் தயவால்தான் நான் ராஜ்யசபா சென்றதாக தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி கூறியது தவறு. அவர் ஆத்திரத்தில், கோபத்தில், என் மீது கொண்டுள்ள வன்மத்தில், இப்படி சொல்லியுள்ளார். ஒரு ராஜ்யசபா எம்பி யை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் போதும். மூன்று ராஜ்யசபா எம்பிக்களை தேர்ந்தெடுக்க 102 எம்எல்ஏக்கள் இருந்தால் போதும். திமுகவில் 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே திமுக என்னை திருப்பி அனுப்பியது.
திமுக எம்எல்ஏக்கள் எனது பெயரை முன்மொழிந்தவர். அதில் ஒருவர் கூட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் கிடையாது. திமுக எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு என்னை அனுப்பி உள்ளார்கள். காங்கிரஸ் தயவில் நான் செல்லவில்லை.
நீங்கள் இல்லை
காங்கிரஸ்காரர்களிடம் ஓட்டு வாங்கி நான் என்றுமே ராஜ்யசபா போனதில்லை. இருமுறையும் வாஜ்பாயுடன் தான் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டேன். காங்கிரசோடு கூட்டு வைக்கவில்லை. 1998, 1999ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருந்தேன். காங்கிரஸ் தயவால் நான் என்றுமே எம்பியாக போனதில்லை. போகவும் மாட்டேன். ஒரு இனத்தையே அழித்த பாவிகள் காங்கிரஸ்காரர்கள். என்மீது கோபம் இருந்தால், வேறு ஏதாவது திட்டித் தீர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னை தேர்ந்தெடுத்து ராஜ்யசபா அனுப்பியதாக இனிமேல் சொல்லாதீர்கள். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
அற்பபுத்தி
அமித் ஷா சொல்லித்தான் நீங்கள் காங்கிரசை விமர்சனம் செய்ததாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சொல்லியுள்ளாரே, என்ற கேள்விக்கு, "அற்ப புத்தி உள்ளவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்வதில்லை. மோடியிடம் சென்றபோது காஷ்மீர் பிரச்சினையில் உங்களை எதிர்த்து ஓட்டு போடுவேன் என்று நான் சொன்னேன். நியூட்ரினோவை கொண்டு வந்தால் இந்த தென்நாடு அழியும். பென்னிகுயிக் கட்டிய அணையும் உடையும் என்று சொன்னேன். ஹைட்ரோ கார்பன் திட்டமும், மேகதாது அணைக்கட்டும் தமிழ்நாட்டை, எத்தியோபியாவாக மாற்றிவிடும் என்று மோடியிடம் நான் தெரிவித்தேன். நேருக்கு நேராகவே சொன்னேன். காஷ்மீர் விவகாரத்தில் 12 எம்பிக்கள் ஓட்டு போடாமல் லோக்சபாவில் இருந்து ஓடிப்போய்விட்டார்கள். அந்த காங்கிரஸ் எம்பிக்கள் எவ்வளவு காசு வாங்கினார்கள்?" என்று கேள்வி எழுப்பினார் வைகோ.
கொள்கை
நான் எந்த காலத்திலும், எங்கேயும் கொள்கையை விட்டுக் கொடுக்காதவன் என்பதை உலகம் அறியும். அரசியலில் கடைசிவரை, ராஜாஜியும், பெரியாரும் நண்பர்களாகத்தான் இருந்தார்கள். பெரியாரை யாரும் குறை சொல்லவில்லையே. மன்மோகன் சிங்கை நான் முன்பு சந்தித்தபோதுகூட, பிரதமராக நான் உங்களை கண்டிக்கிறேன், நண்பராக உங்களைப் பார்க்கிறேன் என்று சொன்னேன்.
மன்னிப்பு கிடையாது
மன்மோகன் சிங் வீட்டுக்கு சென்றபோது, நீங்கள் எனது இளைய சகோதரர் போன்றவர். நீங்கள் குடும்பத்தோடு எங்கள் வீட்டுக்கு சாப்பிட வர வேண்டும் என்று தெரிவித்தார். யாரையோ திருப்திப்படுத்த வேண்டும் என்றெல்லாம் இதுபோல பேட்டி கொடுப்பவர்களுக்கு அற்ப மதி இருக்கும். எனக்கு கிடையாது. நான் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன். பிரதமர் மோடி இடமே சென்று, அவருடைய தவறுகளை சுட்டிக் காட்டுகிற தைரியம் வைகோ ஒருவனுக்கு தான் உண்டு என்பது உலக தமிழக தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். ஈழத் தமிழினத்தை படுகொலை செய்த பாவிகள் காங்கிரஸ்காரர்கள். அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. இவ்வாறு வைகோ ஆவேசமாக பேட்டி அளித்தார்.