தீபாவளி பண்டிகை: கடைகளில் மொய்க்கும் மக்கள்.. துணியுடன் கொரோனாவையும் விலைக்கு வாங்கும் மக்கள்?
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள துணிக் கடைகள், நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கூட்டத்தினர் கொரோனா நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Recommended Video
தீபாவளிப் பண்டிகை நாளன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விடியற்காலையில் நல்லெண்ணெய் வைத்து தலைக்கு குளித்துவிட்டு புத்தாடைகளை உடுத்திக் கொண்டு பட்டாசு வெடிப்பது வழக்கமான ஒன்றாகும்.
தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்!
அத்தகைய தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளிக்கு புத்தாடைகளும் பட்டாசுகளும், இனிப்பு பலகாரங்களும் முக்கிய இடத்தை பிடித்தாலும் நகைக் கடைகளும் அந்த லிஸ்ட்டில் உள்ளன.
மாப்பிள்ளைக்கு மோதிரம்
தலை தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு மோதிரம், செயின் போடுவது மக்களின் வழக்கமாகும். அவ்வாறு அண்மையில் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் உள்ளிட்டோரும் நகைக் கடைகளில் அலைமோதத் தொடங்கிவிட்டனர். இந்த தீபாவளிக்கு ஆடை வாங்குவது என்பது அவரவர் வசதிக்கேற்ப வாங்கப்படும்.
பட்டாடைகள்
நன்கு வசதி படைத்தவர்கள் பட்டாடைகள் வாங்குவர். வசதி இல்லாதவர்கள் குறைந்த விலையில் வாங்குவர். பட்டு என்றாலே மக்களின் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம், ஆரணி உள்ளிட்ட இடங்கள்தான். என்னதான் தாங்கள் வசிக்கும் பிரபல கடைகளில் பட்டாடைகள் வந்தாலும் நெசவு செய்யும் இடத்திற்கே போய் வாங்குவதையே மக்கள் விரும்புகிறார்கள்.
புது டிசைன்
அந்த வகையில் இந்த ஆண்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புது புது டிசைனில் உடைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுநாள் வரையில் வெள்ளி ஜரிகையில் தங்க முலாம் பூசிய பட்டு ஜரிகை சேலைகளும், தூய வெள்ளி ஜரிகை நிற சேலைகளும், வெள்ளி ஜரிகையில் செம்பு நிறம் பூசிய ஜரிகை பட்டு சேலைகளும் என பல்வேறு டிசைன்களில் அறிமுகமாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி ஜரிகை
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தூய பட்டு வெள்ளி ஜரிகையில் தங்கம், செம்பு பூசிய ஜரிகையில் கால மாற்றத்திற்கு தகுந்தவாறு பட்டு சேலை கட்டும் பெண்களை கவரும் வகையில் காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் கலம்காரி எனும் பிரிண்டிங் ரக புதிய பட்டு சேலைகள் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர் பட்டுச் சேலை உற்பத்தியாளர்கள்.
வேஷ்டி ரகங்கள்
மேலும் இதுநாள் வரை ஆண்கள் அணிந்து கொள்ள பட்டு வேஷ்டி ரகங்களில் வெள்ளை மற்றும் சந்தன நிற வேட்டிகளே இருந்த நிலையில் தற்போது பட்டுச் சேலைகளுக்கு மேட்சிங்காக பல வண்ண நிறங்களில் பட்டு வேட்டிகள் தீபாவளி பண்டிகைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. பழமையும் பாரம்பரியமும் நிறைந்த பட்டுச் சேலைகளிலும் பிரிண்டிங் ரகத்தை புகுத்தி புதுப்புது டிசைன்களில் பட்டுச் சேலைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்
பட்டுப் பாவாடை
பெண் குழந்தைகளுக்குத் தேவையான பட்டுப்பாவாடை ரகங்களும், தற்போது விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது. காஞ்சிபுரத்திற்கு ஏராளமான தமிழகம்,ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வரத் துவங்கியுள்ளனர். கொரானா ஊரடங்கு தளர்வுக்கு பின்பு காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலைகளின் விற்பனையும் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளதால் பட்டுச்சேலை நெசவாளர்களும் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவல்
எனினும் இது போன்ற பண்டிகைகாலங்களில் கூடும் கூட்டங்களால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதே இல்லை என்ற புகார் எழுகிறது. அதோடு பலர் மாஸ்க் அணியாமல் கடைகளில் சுற்றி திரிகிறார்கள். கடைகளுக்கு உள்ளே செல்லும் போது மாஸ்க் அணிந்தால் மட்டுமே அனுமதி என்பதால் அங்கு மாஸ்க் அணியும் மக்களில் சிலர் உள்ளே சென்றதும் அணிவதில்லை என தெரிகிறது. மாநகராட்சி அதிகாரிகளும் நகராட்சி அதிகாரிகளும் சுகாதாரத் துறையினர் கொரோனா 3-ஆவது அலையை சமாளிக்க பொதுமக்களை நம்பியுள்ள நிலையில் இது போன்ற விதிமீறல்களால் அச்சம் எழுந்துள்ளது.