பாஜகவில் ஆள் ஆளுக்கு ஒரு கருத்து கூறுகிறார்கள் அதற்கு பதில் சொல்ல முடியாது - ஜெயக்குமார்
கூட்டணி தொடர்பாக ஆள் ஆளுக்கு ஒரு கருத்து சொல்வார்கள் அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: தேர்தல் கூட்டணி பற்றி பாஜகவில் ஆள் ஆளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்கள். பொன் ராதாகிருஷ்ணன் சொன்னது கட்சி தலைமையின் கருத்தா என்பது தெரியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியதுதான் திமுகவின் சாதனை என்றும் கூறியுள்ளார் ஜெயக்குமார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதிமுக வரும் சட்டசபை தேர்தல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் சந்திக்கிறது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து எதிர்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையின் அதிமுகவின் கூட்டணியில் உள்ள பாஜக தலைவர்கள் சிலரும் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது பற்றியும் தேர்தல் கூட்டணி பற்றியும் கருத்து கூறி வருகின்றனர்.
திடீர்னு திரியை கொளுத்தி போட்ட "தங்கம்".. இனிமேல்தான் பிரச்சினையே.. அதிமுக அதிருமா?!
முதல்வர் வேட்பாளர்
பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று தனது பேட்டியில், அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கலாம். ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், முதல்வர் வேட்பாளரை தேர்தல் நேரத்தில்தான் அறிவிக்கும் என்று சொன்னார்.
கூட்டணியில் மாற்றம் வரும்
தேர்தலுக்கு முன்பாக கூட்டணிகளில் மாற்றம் ஏற்படலாம். நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம். திமுகவுடன் கூட்டணி வைக்கலாம். இந்த இரண்டு கட்சிகளும் இல்லாது வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். பாஜக தலைமையில் அணி அமையலாம். எல்லாவற்றுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.
எல். முருகன் பேட்டி
அதே நேரத்தில் மாநில பாஜக தலைவர் எல். முருகன் கூட்டணி பற்றி பேசும் போது, அதிமுக உடன் தான் கூட்டணியில் இருப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில் ஸ்டாலின் ஒரு போதும் முதல்வராக முடியாது என்றும் கூறினார்.
பதில் சொல்ல முடியாது
திமுக கூட்டணியில் பாஜக இடம்பெறலாம் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், கூட்டணி தொடர்பாக பாஜகவில் ஆளாளுக்கு கருத்து கூறுகிறார்கள் அதற்கெல்லாம் பதில் கூற முடியாது என்றார்.
நாங்கள் மரியாதை தெரிந்தவர்கள்
கூட்டணியை மதிக்கும் கட்சி அதிமுக. திமுக போல் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூட்டணி கட்சியை அவன் இவன் என்று பேசினார்.அப்படி எல்லாம் எங்களால் பதில் கூற முடியாது என்று கூறினார்.
பாதாளத்தில் தள்ளிய திமுக
அதிமுகவை பற்றி ஸ்டாலின் கூறிய கருத்து பதில் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பம் திமுக. கொள்ளையடித்து தமிழகத்தை அதளபாதாளத்திற்கு தள்ளியது தான் திமுகவின் சாதனை என்றும் அவர் தெரிவித்தார்.