சென்னையை விட்டு இப்படி போவதுதான் ஆபத்து.. சொன்னால் கேளுங்கள் மக்களே.. அன்னை அழைக்கிறாள் பாருங்க!
சென்னை: இன்று நள்ளிரவு முதல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில், தீவிர ஊரடங்கு, அமலுக்கு வருகிறது. 12 நாட்கள் இந்த ஊரடங்கு நீடிக்கும் என்பதால் சாரை சாரையாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் கிளம்பி செல்வதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இ பாஸ் இருக்கிறதோ இல்லையோ, குடும்பத்தோடு கிளம்பிச் செல்கிறார்கள் மக்கள். சிலர் வீட்டில் உள்ள தொலைக்காட்சி, பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களையும் தூக்கிக்கொண்டு மினி லாரிகளில் பயணிப்பதை பார்க்க முடிகிறது.
ஊரடங்கு அமலுக்கு வந்த போது, வட இந்தியா புலம்பெயர் தொழிலாளர்கள் எப்படி தமிழகத்திலிருந்து அவர்கள் மாநிலத்தை நோக்கி சாரை சாரையாக கிளம்பிச் சென்றனரோ அந்த கொடுமையான காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் இருக்கிறது, நமது மக்கள் சென்னையிலிருந்து கிளம்பி செல்லக்கூடிய இந்த நிகழ்வு.
டூவீலரே போதும்.. குடும்பத்தோடு ஓட்டம் பிடிக்கும் சென்னை மக்கள்.. திருப்பியனுப்பும் போலீஸ்.. பரபரப்பு
பல தலைமுறை பாசம்
வேலைவாய்ப்பு வசதிகள் இல்லாத நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் இருந்து, ஒரு சில தலைமுறைகளுக்கு முன்பாகவே சென்னையில் வந்து செட்டில் ஆனவர்கள் ஏராளம், ஏராளம். சென்னைக்கு வந்துவிட்டால் போதும், எப்படியாவது மூன்று வேளை பசியாற ஒரு வேலை வாய்ப்பு கிடைத்து விடும், ஒரு தொழில் வைத்து நடத்தி விடலாம், என்று ஆயிரம் ஆயிரம் நம்பிக்கைகளுடன் இங்கு வருகிறார்கள் மக்கள். வந்தவர்களை வாழ வைத்துதான் பழக்கமே தவிர, கைவிட்டு சரித்திரம் கிடையாது சென்னை அன்னையின் அகராதியில்.
உச்சத்தில் வைத்த சென்னை
பல தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியதும், அவர்களை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்ததும் இதே சிங்காரச் சென்னைதான். இன்று, கொரோனா என்னும் அரக்கன், சென்னை எனும் நம் எல்லோரின் அன்னையை மிரட்டிக் கொண்டு இருக்கும்போது, அதை விரட்டி விடுதலை அளிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள நாம் அஞ்சி நடுங்கி வேறு இடங்களுக்கு ஓடுவது, தவறல்லவா? வாழ்க்கை கொடுத்து, நமது வாழ்வின் ஒரு அங்கமாக மாறி போன சென்னையை, நாம் கைவிட்டு ஓடினோம் என்று வரலாற்றின் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டுமா?
அத்தியாவசிய பொருள் கிடைக்கும்
என்ன இல்லை இந்த நகரில்? ஏழை, எளியவர்களுக்கு பசியாற அம்மா உணவகங்களில் இலவச உணவு, முதியோர் அல்லது ஆதரவற்றோராக இருந்தால் வீடுகளுக்கே உணவு தேடிவரும் என்ற அரசின் அறிவிப்பு, இத்தனையையும் தாண்டி அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு கடைகள் திறக்க காலக்கெடு நிர்ணயம், நல்ல மருத்துவ கட்டமைப்பு உள்ளிட்ட அத்தனை வசதிகளையும் வைத்துக்கொண்டு 12 நாள் ஊரடங்கு என்பதற்காக பயந்துபோய் நாம் வெளியேறினால், நாளைய தலைமுறை என்ன நினைக்கும்.
கூடுதல் சுமை தேவையா
ஊருக்குச் சென்றால் உயர்வான வாழ்வு இருக்கிறது என்று உத்தரவாதம் அளித்தது யார்? ஏற்கனவே தொழில் வசதியில்லாத சொந்த ஊர்களில் கூடுதலாக நாம் சென்று சுமையை ஏற்றி சாதிக்கப்போவது என்ன? ஒருவேளை நம்மையும் அறியாமல் தொற்று உடலில் இருந்தால்.. ஊரில் நிம்மதியாக இருக்க கூடிய வயதான முதியோருக்கும் அதை பரப்பிவிட்டு தாங்கொண்ணா துயரை அவர்களுக்கு பரிசளிக்கப் போகிறோமா? அடிப்படை மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாத நமது கிராமங்களில், கொரோனா எனும் பெருந்தொற்று அரக்கன் கால்பதித்தால் அதன் கொடூர முகம் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்ப்பதற்கு கூட அச்சப்படும் நிலைதானே இருக்கிறது.
சமூக பரவலாக மாற்றப்போகிறோமா
அப்படியே நீங்கள் ஊருக்கு போனாலும், போகும் வழியில் எத்தனையோ சோதனை சாவடிகள்.. லேசாக தும்மல் விழுந்தாலும் உங்களை முகாமுக்கு மாற்றி விடுவார்கள். இதற்கு சென்னையில் இருந்திருக்கலாமே என்ற எண்ணம் உங்களை நிம்மதியாக தூங்க கூட விடாது. சென்னை போன்ற ஒரு சில இடங்களில் நிலவும் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கானோர் சென்று கொரோனாவை சமூக பரவலாக மாற்றி விடுவது நியாயமா என்பதை ஒரு நிமிடம் சிந்திக்கவும்.
12 நாள் முக்கியம்
ஊரடங்கு காலத்தில் எங்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதை விடுத்து ஊரை நோக்கி ஓடிப்போவது எப்படி பிரச்சினையை சரி செய்யும். மறுபடியும் சென்னைதான் வாழ்வளிக்க போகிறது, அதற்குள் நாம் பிற இடங்களிலும் இந்தப் பெரும் தொற்றை பரவவிட்டு, முதியோருக்கு பரப்பி, அந்தப் பழியை நம் தலைமீது கட்டிக் கொள்ள வேண்டாமே. அனைவரும் அரசு சொல்லக்கூடிய விதிமுறைகளை மதித்து நடந்து, வீடுகளுக்குள் இருந்தாலே, அடுத்த 12 நாட்களுக்குள் நோய் கண்டிப்பாக கட்டுப்பாட்டுக்குள் வரும்.
அரசு நடவடிக்கைகள்
ஏற்கனவே அரசு சென்னையில் சோதனைகளின் அளவை மிகவும் அதிகப்படுத்தியுள்ளது. தமிழகமெங்கும் 15,000 நபர்களுக்கு சோதனை செய்த நிலையில் நேற்று 20,000 பேராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஊரடங்கு காலகட்டத்தில் மிக அதிகமாக உயரும். நோயாளிகள் மற்றும் அவர்களின் தொடர்புகள் முறையாக கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சைக்கு பிறகு, குணப்படுத்தப்படுகின்றன. சென்னை மீண்டும் சிரிக்கும் சிங்காரச் சென்னையாக மாறும். நம்புங்கள் சென்னை அன்னை எப்போதும் நம்மை கைவிடமாட்டாள்!