வாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை
சென்னை: பால் விலை உயர்வு தங்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்று பெண்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியறுத்தியுள்ளனர்.
தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் அனைத்து வகையான பால் விலையையும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் 4 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு ரூ. 4 ரூபாய் உயர்த்தவும், எருமைப்பால் கொள் முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35ல் இருந்து 41 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது..
இதேபோல் பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கான பால் பணப்பட்டுவாடா எவ்விதத்திலும் பாதிப்படையக்கூடாது என்பதற்காகவும் நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து வினியோகம் செய்வதை உறுதிப்படுத்தவும், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படும். இந்த விலை உயர்வு திங்கள் கிழமை (19.08.2019) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பால் விலை உயர்வுக்கு சென்னையில் பெண்கள் மத்தியில் கடும் எதிரப்பு எழுந்துள்ளது. நம்மிடம் கருத்து கூறி பல பெண்களும் பால் விலை உயர்வால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்றும் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே பால் வாங்க முடியாத நிலையில் அரைலிட்டர் பால் வாங்கி அதில் தண்ணீர் அதிகமாக ஊற்றி குழந்தைகளுக்கு வழங்கி வருவதாக வேதனை தெரிவித்த ஒரு பெண், இப்போது மேலும் 6 ரூபாயை உயர்த்தி இருப்பதால் எங்களுக்கு மிகுந்த பாதிப்பை தரும் என்றார்.
பால் விலை உயர்வுக்கு சென்னையில் தேனீர் கடை உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களிடம் பணப்புழக்கமே இல்லாததால் மக்களுக்கு வாங்கும் சக்தி இல்லாத நிலையில் தேனீர் விலையை உயர்த்தினால் கடைக்கு வந்து தேனீர் சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றும் விலையை உயர்த்துவதால் விற்பனையில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார்கள்.