டெல்லி முதல் தஞ்சை வரை.. ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மொத்தமாக போராட்டத்தில் குதித்த மக்கள்.. பரபரப்பு
Recommended Video
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுக்க பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மீத்தேன் திட்டத்திற்கு தமிழகம் முழுக்க கடுமையான எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில் அதை கைவிட்ட மத்திய அரசு தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
முதற்கட்டமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
என்ன திட்டம்
இந்த திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தற்போது ஓஎன்ஜிசியை வைத்து ஆய்வு பணிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.
மக்கள் போராட்டம்
இதையடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுக்க பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்கள் முழுக்க இந்த போராட்டம் காரணமாக கொதிப்பான நிலை காணப்படுகிறது.
எங்கு எல்லாம் நடக்கிறது
கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைதான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக மத்திய அரசு குறி வைத்துள்ளது. இதனால் தற்போது அங்கு ஹைட்ரோ கார்பன் போராட்டம் வெடித்துள்ளது. எல்லா வீடுகளிலும் மக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதேபோல் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
பெரிய ஆர்ப்பாட்டம்
கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி இன்று காலை மக்கள் பேரணியாக சென்றார்கள். தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் பெரிய அளவில் மக்கள் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது.
யார் சார்பாக போராட்டம்
இதில் பெரும்பாலான போராட்டங்களை காவிரி படுகை பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்தி வருகிறார்கள். அதே சமயம் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். திமுக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த தொண்டர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
டெல்லியிலும் போராட்டம்
டெல்லியிலும் தமிழர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி வாழ் தமிழர்கள் உடனடியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி டெல்லியில் பல்வேறு இடங்களில் சிறு சிறு குழுக்களாக கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.