பொங்கல் விடுமுறை முடிந்தது... சென்னைக்கு படையெடுத்த மக்கள்
சென்னை: கடந்த ஒரு வார கால பொங்கல் விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.
இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்றிரவு முதலே ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சுமார் 10 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்றிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் இப்போது திரும்புவதால் செங்கல்பட்டில் இருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முரசொலியை விடுகதை பாணியில் தாக்கியிருக்கிறார் ரஜினி.. பாராட்டத்தான் வேண்டும்.. அதிமுக
சொந்த ஊர்
பொங்கல் பண்டிகையை உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே சென்னை திரும்பத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நாளை திங்கள்கிழமை என்பதால் பணிக்கு செல்ல வேண்டியவர்கள் இன்று காலை முதலே சென்னை திரும்பி வருகின்றனர்.
கூட்டம்
இதனால் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், என பல இடங்களிலும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதி வருகிறது. போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை.
செங்கல்பட்டு முதல்
செங்கல்பட்டு சுங்கச்சாவடி முதல் பெருங்களத்தூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நகருக்குள் ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு நகரப் பேருந்துகள் மூலம் தாம்பரம், விமான நிலையம், கிண்டி, வடபழனி, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்படுகின்றன.
கூடுதல் எண்ணிக்கை
தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும் 4,500 சிறப்புப் பேருந்துகள் சென்னைக்கு மட்டும் இயக்கப்படுகின்றன. இதைத்தவிரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்ற உள் நகரங்களுக்கு இடையே, அதாவது மதுரை-திருப்பூர், திருச்சி-கோவை என இயக்கப்படுகின்றன.