நாளை முதல் முழு ஊரடங்கு: 4 நாட்களுக்கு பொருட்கள் வேண்டுமே.. சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம்
சென்னை: நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில், மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கடைகளில் குவிந்துள்ளனர்.
Recommended Video
சென்னை, மதுரை, கோவையில், ஏப்ரல் 26ம் தேதியான, நாளை, ஞாயிறு காலை 6 மணி முதல், ஏப்ரல் 29ம் தேதி புதன் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும்.
மருத்துவமனை, மெடிக்கல் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். காவல்துறை, வருவாய் பேரிடர், உள்ளாட்சி, குடிநீர் வழங்கல், மின்சார துறை உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகள் மட்டுமே செயல்படும்.
சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களில் ஏப்ரல் 26ம் தேதியான நாளை முதல், ஏப்ரல் 28 வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இவ்வாறு தமிழக அரசு நேற்று அறிவித்தது.
சூப்பர் மார்க்கெட்
இதையடுத்து சென்னையில் இன்று பல்வேறு சூப்பர் மார்க்கெட் கடைகளில் காலை முதல் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க வைக்கப்பட்டுள்ளனர். காய்கறி கடை என்றால் காய்கறிகள் மட்டும் வாங்க முடியும், பலசரக்கு கடையில் அவற்றை மட்டும் வாங்க முடியும். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் அனைத்து வகைப் பொருட்களை வாங்கி விடலாம் என்பதால் இதை நோக்கி மக்கள் அதிகம் சென்றனர்.
சமூக இடைவெளி
ஆனால் மூடி வைக்கப்பட்ட பெரிய பகுதி இது என்பதால் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் மிக மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதேபோன்றுதான் கோவை, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களிலும் காலை முதல் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அலை மோதினர்.
மதுரையில் கூட்டம்
மதுரையில் சித்திரை திருவிழா இந்த வருடம் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் இன்று காலை 5 மணி முதல் காய்கறி கடைகளில் கூடிய கூட்டத்தை பார்த்தால் சித்திரை திருவிழா நடக்கிறதோ என்று தோன்றும் அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்தது. கூடுதலாக 4 இடங்களில் காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டு இருந்த போதிலும் கூட, அனைத்து மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகள் விரைவில் விற்று தீர்ந்தன. மக்கள் போதிய சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக வந்து காய்கறிகளை வாங்கியதை பார்க்க முடிந்தது.
வீடுகளுக்கு காய்கறி
மதுரை மாவட்ட ஆட்சியர், வினய் இதுபற்றி கூறுகையில், நான்கு நாட்கள் மார்க்கெட் இல்லை என்றாலும் கூட, காய்கறிகள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும். காய்கறி வண்டிகள் மூலமாகவும் வினியோகம் செய்யப்படும். எனவே மக்கள் கூட்டம் கூட்டமாக காய்கறி சந்தைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்டாலின் கோரிக்கை
இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். மதியம் 1 மணிவரைதான் கடைகள் திறக்க வேண்டும் என்பது உத்தரவு என்பதால், நேர நீட்டிப்புக்கு ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.