நான் ஒருத்தன் உதவி என்ன பிரயோஜனம்? .. புயல் பாதித்த மக்களுக்கு உதவ புஷ்புவனம் குப்புசாமி அழைப்பு
நாகை மக்களுக்கு உதவுமாறு புஷ்பவனம் குப்புசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: "குடிக்க நீர் தர்ற தென்னையை காணோம்.. பால் தர பசுமாட்டை காணோம்.. நாகை மக்களுக்கு நான் ஒருத்தன் உதவி பண்ணி என்ன பிரயோஜனம்? நீங்களும் கொஞ்சம் வாங்களேன்... "என்று பொதுமக்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி அறைகூவல் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன் மாவட்டத்தின் தற்போதையை அவல நிலையை கண்ணீருடன் பதிவு செய்துள்ளார். வீடியோவில் புஷ்பவனம் குப்புசாமி சொல்லி உள்ளதாவது:
"என் மாவட்டம், என் மக்கள், துன்பத்தில் துவண்டுக்கிட்டு இருக்கேன். நான் ஊருக்கு போனா குடிக்கிறதுக்கு நீர் தருகிற தென்னை மரங்கள் ஒன்னை கூட இல்லை.. பால் தர பசுமாடு உயிரோட இல்லை.. எல்லாம் தரை மட்டமாயிடுச்சி. என்னால பார்க்கவே முடியல.
படுக்க கூட முடியல
நாகையிலிருந்து வேதாரண்யம் வரைக்கும் கடற்கரை கிராமங்களில் ஒரு மரம்கூட இல்லை. எல்லாம் வெட்டவெளியாக கிடக்கு. வீடு இல்லை. சாப்பாட்டுக்கு வழி இல்லை.. கஞ்சிகூட குடிக்க வழி இல்லை.. படுக்க பாய் இல்லை.. மரத்தடியில கூட படுக்க முடியாம ஈரமா இருக்கு. என் மக்கள் கஷ்டப்படுவதை தாங்க முடியல.
உதவி செய்யுங்கள்
தமிழக அரசு அல்லது பொதுநல அமைப்புகள், அல்லது தனியார் அமைப்புகள் யாராக இருந்தாலும் சரி, தயவு செய்து நாகப்பட்டினத்துக்கு வந்து உதவுங்கள். நான் ஒருத்தனால் என்ன செய்ய முடியும்? எனவே தமிழ் உணர்வோடு உணவோ, உடையோ எதுவானாலும் நாகை மக்களுக்கு உதவி செய்யுங்கள்.
நான் போய்ட்டு வரேன்
நேரடியாக உங்களால் நாகைக்கு போக முடியவில்லை என்றால் எனக்கு தொடர்பு கொண்டு உங்கள் நிவாரண பொருட்களை கொடுங்கள். நான் போய் கொடுத்திட்டு வர்றேன். நான் நாகை மக்களுக்கு மருந்து, உள்ளாடைகள், அத்தியாவசிய பொட்களை தந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனா அது பத்தலை.
மருந்துகள் இல்லை
அங்கே பிள்ளைகளுக்கு சாப்பாடு இல்லை. நாம் கொடுக்கும் அரிசி அவர்களுக்கு பத்தவில்லை. முதியவர்கள், குழந்தைகளுக்கு போர்த்தி கொள்ள போர்வைகள் இல்லை.. காய்ச்சலுக்கு மருந்துகள் இல்லை.. அதனால் இதுபோன்ற உதவிதான் இப்போது உடனடி தேவையாக இருக்கிறது"
வீடியோ வைரல்
இவ்வாறு கண்ணீருடன் சொல்லி முடித்தார் புஷ்பவனம் குப்புசாமி. இதையடுத்து இது தொடர்பான ஒரு பாடலையும் பாடியுள்ளார். நா தழு தழுக்க புஷ்பவனம் பேசி வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.