நல்ல தலைவர்கள் நம்மிடமே உள்ளனர்.. நடிகர்கள் தேவையில்லை.. அஜீத் போல மக்களும் சிந்திக்கலாமே!
Recommended Video
சென்னை: நடிகர் அஜீத்தின், அரசியலுக்கு வர மாட்டேன் என்ற தெளிவான அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதேபோன்ற தெளிவான சிந்தனை மக்களிடமும் பெருவாரியாக வரும்போது நிச்சயம், தமிழகம் காமராஜரைப் போன்ற, கக்கனைப் போன்ற திறமையான, தன்னலமற்ற, தெளிவான ஒரு தலைவரைப் பெற முடியும்.
நடிகர்கள் நாடாளமா, நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா கூடாதா என்ற வாதம் இப்போது நேற்று இல்லை.. ரொம்ப காலமாகவே விவாதத்தில் உள்ளது. எம்ஜிஆர் எப்போது அரசியலில் புயல் போலக் கிளம்பி வந்தாரோ அப்போதே இந்த விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. இன்று வரை அதற்கு ஓய்வே இல்லை. ஆனால் எம்ஜிஆரை மக்கள் ஏற்றுக் கொண்டனர். காரணம், அவரது அடிப்படை நடிப்பாக இருந்தாலும் கூட அடித்தளம் அரசியலாகவும் இருந்த காரணத்தால்.
ஆனால் நடித்து பிரலபமான ஒரே காரணத்திற்காக நானும் அரசியலுக்கு வருவேன், மக்களுக்கு சேவை செய்வேன், முதல்வராவேன்.. அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று கதை விடும் நடிகர்களை மக்கள் ஒருபோதும் ஆதரித்தது இல்லை. அதிலும் இப்போ வருவேன். அப்போ வருவேன்.. வரும்போது வருவேன்.. என்று பீலா விடும் நடிகர்களை மக்கள் புறமுதுகிட்டு ஓடச் செய்வது வழக்கமான ஒன்றுதான்.
மக்கள் மனதில் நங்கூரமிட்டு
இந்த நேரத்தில்தான் நடிகர் அஜீத்தின் அறிக்கை பளிச்சென வந்து மக்கள் மனதில் நங்கூரமிட்டு பாய்ந்துள்ளது. இந்த அறிக்கை திரையுலிகினருக்கும், மக்களுக்கும் முக்கியமான செய்தியைக் கொடுத்துள்ளது. உங்க வேலையை சரியாப் பாருங்க, அதை மட்டும் பாருங்க, மற்ற எல்லாம் நல்லதாக நடக்கும் என்பதே அதன் மையக் கருத்து.
பதவி ஆசை, அதிகார போதை
தற்போது சினிமா உலகில் பலருக்கும் அரசியல் ஆசை, பதவி ஆசை, அதிகார போதை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் நம் பக்கம்தான். நாம ஒருவாட்டி ஆசைப்பட்டுட்டா, மக்கள் வாழ்நாள் முழுவதற்கும் நம்மை ஆதரித்து அடிமையாகிக் கிடப்பார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அஜீத் ஒரு நல்ல பாடம் கற்பித்துள்ளார். அளவுக்கு மேலே ஆசைப்படாதே என்பதுதான் அது.
நல்ல செய்தி
மக்களுக்கும் இதில் ஒரு நல்ல செய்தி உள்ளது. உன் தலைவரை உன்னிடமே தேடு.. வெளியில் தேடாதே.. உன்னுடன் இருக்கும் நல்ல தலைவனை அல்லது தலைவியை அடையாளம் அவர்களை ஏற்றி விடு. சினிமாவில் வந்து தலைவனை தேடாதே.. உனக்குத் தலைமை தாங்கும் தகுதி உனக்குத்தான் உண்டு. உன்னுடன் இருப்பவர்களிடம்தான் உண்டு. அரிதாரம் பூசியவர்கள் அவதாரம் ஆக முடியாது என்பதே இதன் சாராம்சம்.
இன்று வரை விழுந்து கிடக்கும் அவலம்
ஒரு காலத்தில் மக்கள் தங்களுக்குத் தேவையான தலைவர்களை தங்களிடம்தான் தேடிக் கொண்டிருந்தனர். அதனால்தான் அவர்களுக்கு காமராஜர், கக்கன் போன்ற சுயநலமே இல்லாத, அப்பழுக்கற்ற நல்ல தலைவர்கள், உண்மையான தலைவர்கள் கிடைத்தனர். ஆனால் என்று அரிதாரத்தின் பக்கம் மக்கள் அலை பாய ஆரம்பித்தார்களோ அன்றே அவர்கள் அடிமைகளாகவும் ஆகி விட்டனர் என்பதே கசப்பான உண்மை. அதிலிருந்து மக்களை மீள விடாமல் சிலர் பார்த்துக் கொள்ளவே, மக்கள் இன்று வரை அதிலேயே விழுந்து கிடக்கும் அவலம் தொடர்கிறது.
மக்கள் அடையாளம் காணலாம்
ஒரு ஊரை எடுத்துக் கொண்டால், அதில் ஒரு பத்து பேராவது அந்த ஊரின் நல்லதுக்காக போராடக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் நிச்சயம் கட்சி சார்பற்றவர்களாக இருப்பார்கள். அதிலிருந்து நல்ல தலைவரை மக்கள் அடையாளம் காணலாம். இப்படித்தான் தலைவர்களை உருவாக்க வேண்டுமே தவிர பத்து நடிகர்களில் யார் நமக்குத் தேவை என்று பார்த்தால் அது நம்மை அவலத்தில்தான் கொண்டு போய் விடும். மக்கள் அஜீத் போல சிந்திக்க வேண்டிய நேரம் இது.
விழித்தெழ முயல வேண்டும்
நடிகர் அஜீத் இன்று சாதாரண மனிதராக சிந்தித்து எடுத்த முடிவு இது. நிச்சயம் பாராட்ட வேண்டும். நான் ஒரு நடிகன். இந்த அடிப்படையை மட்டும் வைத்து நான் அரசியலுக்கு ஆசைப்படக் கூடாது, முடியாது என்பதை அஜீத்தே அழகாக தெளிவுபடுத்தியுள்ளார். அந்த பக்குவம் மற்ற நடிகர்களுக்கும் வரும்போது நிச்சயம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யாரும் அரசியலுக்கு வரத் துடிக்க மாட்டார்கள். மக்களை ஆட்டிப் படைக்க ஆசைப்பட மாட்டார்கள். மக்களும் கூட அஜீத் போல சிந்திக்கலாம்.. ஏன் அஜீத்தோடு இணைந்து சிந்திக்கலாம். உண்மையான தலைவர்கள் நமக்கு வேண்டும் என்றால் நம்முடைய அத்தனை அடிப்படை பிரச்சினைகளும் முறையாக தீர வேண்டும் என்றால் நம்மிலிருந்தே தலைவர்கள் வந்தால்தான் உண்டு. அதற்கு அஜீத் அறிக்கையை பிள்ளையார் சுழியாக வைத்துக் கொண்டு இப்போதாவது விழித்தெழ மக்களும் முயல வேண்டும்.