புதுவகை கொரோனா பரவல் அச்சம்.. பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: புதிய வகை கொரோனா வைரஸ் பரவலில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்பதால், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொதுமக்களை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவாமல் தடுப்பது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. முதலில் கலெக்டர்கள் அதன்பிறகு மருத்துவ குழுவினருடன் எடப்பாடியார் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் முதல்வர் பேசிய வீடியோ தொகுப்பு பிறகு அரசால் வெளியிடப்பட்டது. எடப்பாடியார் கூறியிருப்பதை பாருங்கள்:
மருந்து இருப்பு
தமிழகம் முழுக்க கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது. சிகிச்சை அளிக்க, 15,000 கூடுதல் மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். மாவட்ட அளவில் மருத்துவமனைகளில் போதிய மருந்து இருப்பு செய்து வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்கள்
தேவையான அளவுக்கு மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ளோம். கட்டுப்பாட்டு மண்டலங்களில், இரும்புச்சத்து மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ், அலோபதி மற்றும் இந்திய மருத்துவ முறைகளுடன் இணைந்து சிகிச்சை அளிக்கிறோம்.
மினி கிளீனிக்
இந்த திட்டத்தின்கீழ், மக்களுக்கு, இலவச கபசுர குடிநீர் கொடுப்பதன் காரணமாக, கொரோனா வைரஸ் நோய் பரவல் குறைந்துள்ளது. ஏழைகள் வசிக்கும் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு அம்மா மினி கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அந்தந்தப் பகுதிகளிலேயே சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக அம்மா மினி கிளீனிக் திட்டம் அமல்படுத்தப்படும்.
முகக் கவசம் கட்டாயம்
உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவினாலும் கூட பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிந்து கொண்டு, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம். அவ்வாறு கடைபிடித்தால் கொரோனா பரவாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே பொதுமக்கள் முகக் கவசம் அணியுங்கள். பொதுமக்கள் முக்கவசம் அணியாதது வருத்தமளிக்கிறது, எனவே அனைத்து மாவட்ட ஆட்சியரும் பொதுமக்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். பல இடங்களிலும் முகக் கவசம் அணியாத மக்களை பார்க்க முடிகிறது. தயவுகூர்ந்து முகக் கவசம் அணியுங்கள். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.