யாராச்சும் லட்டுவை பார்த்தீங்கன்னா.. தயவு செய்து தகவல் கொடுத்து சேர்த்து விடுங்கள்!
பூனை காணவில்லை என சைதாப்பேட்டையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
சென்னை: சைதாப்பேட்டை முழுசும் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் அந்த போஸ்டர் பத்திதான் பேச்சா இருக்கு!
லட்டுவை காணோம்.. கண்டு பிடிச்சு தாங்கன்னு ஒரு விளம்பரம் போட்டிருக்காங்க. லட்டுக்கு வயசு 1 வருடம், 3 மாசமாகிறதாம். கூடவே லட்டுவின் அடையாளத்தையும் விளம்பரத்திலேயே சொல்லி இருக்காங்க. மூக்கும், வாயும் வெள்ளையா இருக்குமாம்!! ஆனா லட்டுவின் மொத்த உருவம் கருப்பும், வெள்ளையுமாய் கலந்து இருக்குமாம்!
மண்டை காய்கிறதே.. யார் அந்த லட்டு என்று பக்கத்தில் உள்ள போட்டோவை பார்த்தால் பூனையார் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அதுவும் அந்த பக்கமாக திரும்பி இந்த பக்கமாக போஸ் கொடுக்கிறார் லட்டு.
இப்படி ஒரு போஸ்டரா?
உண்மையிலேயே, மனிதர்களையே மனிதர்களாக பார்க்காத இந்த கலிகாலத்தில் இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு அனைவருமே ஆச்சரியத்திலும், நெகிழ்ச்சியிலும் உள்ளனர். தேய்ந்து கொண்டிருக்கும் மனிதாபிமானத்துக்கு இடையில் இப்படி ஒரு போஸ்டர், சைதாப்பேட்டை பழைய மாம்பலம் சாலையில் ஒட்டப்பட்டுள்ளது அனைவரையுமே ஈர்த்துள்ளது.
1000 ரூபாய்
லட்டுவை நவம்பர் 1-ம் தேதியிலிருந்து காணவில்லையாம். "நீங்கள் எங்கள் பூனையை கண்டுபிடித்தீர்கள் என்றால் எங்களை இந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்" என்று குறிப்பும் உள்ளது. செல்போன், லேன்ட்-லைன் என 2 நம்பர்களும் தரப்பட்டுள்ளது. அது மட்டுமில்லை, எங்கள் பூனையை கண்டுபிடிப்பவர்களுக்கு 1000 ரூபாய் பரிசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகை எவ்வளவு? 1000 ரூபாயா என்று சைதை மக்கள் பார்த்து செல்கிறார்கள்!!
அளவில்லாத பாசம்
உண்மையில் மனிதர்களை விட மிகுந்த பாசக்காரர்கள் இந்த விலங்குகள்தான். குறிப்பாக நாய்கள், பூனைகள் காட்டும் பாசத்திற்கும், அன்புக்கும் அளவே இருக்காது. பாசம் வைத்து விட்டால் மீட்டெடுக்க முடியாது.. வைத்த பாசம் வைத்ததுதான்..
தொலைந்த லட்டு
"உரி்மையாளர்" எத்தனை கோபம் காட்டினாலும், முறைத்தாலும், கோபித்தாலும், சண்டை போட்டாலும்.. திட்டினாலும் இந்த "லட்டு"க்களின் பாசம் எப்போதுமே போகாது, போகவே போகாது.. அவர்களின் அன்புக்காக காத்திருக்கும்.. அப்படிப்பட்ட ஒரு லட்டுதான் இன்று தொலைந்து போயிருக்கிறது. லட்டுவை யாராச்சும் பார்த்தீங்களா?.. பார்த்தால் தயவு செய்து உரியவர்களுக்குத் தகவல் கொடுத்து சேர உதவுங்கள்.