உழைத்தால் கேள்வி கேட்பான்.. எல்லாத்தையும் ஃப்ரீயா கொடு.. சோம்பேறிகளாக்கப்பட்ட மக்கள்.. யார் காரணம்
சென்னை: 70 வருடங்களாக ரேசன் கடைகளில் மக்கள் அரிசிக்காகவும், மண்ணெண்ணெய்க்காகவும், மளிகை பொருட்களுக்காவும் தவம் கிடக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் தாங்களே வாங்கிக்கொள்ளும் சுயபொருளாதார நிலையை அடைய வைக்க நம்மை ஆண்ட அரசுகள் இன்னும் முயற்சிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களை தாண்டிவிட்டது. ஆனால் இன்னமும் நாம் அரிசிக்கும், மளிகைக்கும், ஏன் நம் அடிப்படை தேவைக்கும் கையேந்தும் நிலையில் தான் அரசுகள் வைத்திருக்கின்றன. சுயமாக வாங்கிக்கொள்ளும் அளவுக்கு மக்களின் பொருளாதாரத்தை மாற்றாதது யார் குற்றம்.
வேலை கிடைக்காததை நமது குறையாக பார்க்கும் மக்களே, வேலைக்கான தகுதி மற்றும் திறமைகளை வளர்க்க முடியாதது குற்றம் என நினைத்தால், அதற்கான வாய்ப்புகளை சமமாக உருவாக்கித் தராதது அரசின் குற்றம் என யாரும் நினைக்கவில்லை.
ஏழைகளுக்கு இல்லை
தரமான கல்வி, தரமான குடிநீர், தரமான சுகாதாரம் பணக்கார்களுக்கு மட்டுமே கிடைக்கிறதே என ஏங்கும் பலருக்கு ஒரு கேள்வி, பணக்கார்களுக்கு மட்டும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கிறதே.. உங்களுக்கு கிடைக்காமல் போனதற்கு நாம் தேர்ந்தெடுத்த அரசுகளின் இயலாமை தான் காரணம் என்று என்றாவது நீங்கள் எண்ணியதுண்டா?
இலவசங்கள்
உங்களுக்கும் அரிசி கிடைக்கிறது, உங்களுக்கும் பருப்பு கிடைக்கிறது, உங்களுக்கும் கல்வி, சுகாதாரம் என எல்லாம் கிடைக்கிறது. ஆனால் எப்படி கிடைக்கிறது. காசு உள்ளவர்களை போல் உங்களுக்கு கிடைக்கிறதா. அரசு எதை எதையோ இலவசமாக அள்ளி தருகிறது. நாமும் மகிழ்ச்சியோடு வாங்கி கொள்கிறோம்.
உழைக்காமல் வைப்பது
ஆனால் இதில் தான் ஓரு சூட்சமம் இருக்கிறது. உழைத்தால் கேள்வி கேட்பான். எனவே உழைக்காமல் வாழ்க்கைக்கு தேவையானதை இலவசமாக கொடுத்துவிட்டால் உழைப்பதையும் குறைத்துவிடுவோம். நம்மை நோக்கி எந்த கேள்வியும் வராது. என்ற காரணங்களால் இலவசங்களை தமிழகத்தை ஆளும் ஆண்ட அரசுகள் கொடுக்கின்றனவா? என்ற கேள்வியை புறந்தள்ள முடியவில்லை.
தரமான கல்வி
உண்மையில் மக்களுக்கு அரசு இலவசமாக தரவேண்டிய தரமான கல்வி, தரமான குடிநீர், தரமான சாலை, தரமான சுகாதாரம் என எல்லாவற்றையும் காசாக்கி விற்க தனியாருக்கு அனுமதித்தது ஏன்? உண்மையில் மக்கள் நல திட்டங்களாக மேலே சொன்னவற்றைத்தான் அரசு மக்களுக்கு கொடுத்து இருக்க வேண்டும்.
டிவி, மிக்ஸி
மாறாக மக்களுக்கு அரிசி, டிவி, பேன், மிக்ஸி, ஆட்டுக்குட்டி, மாடு, கிரைண்டர், தங்க நகை, பால் வாங்க காசு, தங்க நகை என கொடுப்பது ஏன், இலவசங்களையும் உதவித்தொகைகளையும் முடியாதவர்களுக்கு கொடுக்கலாம். ஆனால் இல்லாதவர்களாக நம்மை ஆக்கி இப்போது வரை கொடுப்பது ஏன்? முன்பே சொன்னது போல், ஒருவனுக்கு உழைக்காமலே, வாழ்க்கைக்கு தேவையானவற்றை கொடுத்துவிட்டால் அவன் கேள்வி கேட்க மாட்டான் என்பதே இதற்கு காரணம்.
குமாஸ்தா படிப்பு
எத்தனையோ செய்யும் அரசுகள், சுயசார்புடன் அனைத்து விஷயங்களையும் வாங்கி கொள்ளும் வகையில் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை உருவாக்காதது ஏன்? வேலை வாய்ப்பை உருவாக்கும் திறமையான கல்வி, சுயதொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தக்கூடிய சூழல், இவற்றை செய்து கொடுப்பதில்லை. ஆனால் வெள்ளைக்காரன், குமாஸ்தா வேலைக்கு கற்றுக்கொடுப்பது மாதிரியான மெக்காலே கல்வியையும், இலவச அரிசியும். அடிபட்டால் சாகாமல் காப்பாற்ற ஆஸ்பத்திரியும், உயிர்வாழ ஆற்று தண்ணீர் வர டேங்க் கட்டி கொடுத்தால் போதுமா? மக்கள் உயிர்வாழவே இவர்கள் திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். மற்றபடி பணக்கார்கள் வசதியாக ஆளவும், ஏழைகள் அவர்களுக்கு உழைத்து சேவகம் செய்யவுமே அரசுகள் இயங்குகின்றன.