செல்போனில் மூழ்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டனர்... லதா ரஜினிகாந்த் வேதனை
சென்னை: செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டதாக லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
லதா ரஜினிகாந்தால் உருவாக்கப்பட்ட Peace for children என்ற குழந்தைகள் நல அமைப்பின் தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய லதா ரஜினிகாந்த்,
இந்தியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருப்பதாக தெரிவித்தார். மேலும், அண்மையில் நடக்கும் சம்பவங்களை பட்டியலிட முடிவில்லை என்றார்.
சமூகத்தில் அனைவரும் குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் எனக் கூறிய லதா ரஜினிகாந்த், கூட்டுக் குடும்பங்கள் தற்போது குறைந்து விட்டதால், குழந்தைகளுக்கு நல்லதை சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லாமல் வளரும் சூழல் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குழந்தைகள் கடத்தல், விற்பனை சம்பவங்கள், சாதாரண செய்தி போல நாள்தோறும் கடந்து செல்வது வேதனை அளிப்பதாக கூறிய லதா ரஜினிகாந்த், முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருந்தது, குழந்தைகளை பெரியவர்கள் கண்காணித்து கொண்டே இருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.