ஆ.ராசாவுக்கு ஆதரவு- ராமநாதபுரத்தில் மனுதர்மம் எரிப்பு- மேட்டுப்பாளையத்தில் பெரியார் கைத்தடி ஊர்வலம்!
சென்னை: இந்துக்களை சூத்திரர்கள்- விபச்சாரி மகன் என மனுதர்மம் இழிவுபடுத்துகிறது என பேசிய மூத்த திமுக தலைவர் ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்; ராமநாதபுரத்தில் மனுதர்ம எரிப்பு; மேட்டுப்பாளையத்தில் பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என மனுதர்மத்தை மேற்கோள்காட்டி திமுக எம்.பி. ஆ.ராசா பேசினார்.
ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தமிழகப் பெண்களை ஆ.ராசா இழிவுபடுத்திவிட்டார் என்று அவரது பேச்சை திசை திருப்புகின்றன. அத்துடன் தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவினர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகிறது என அடுத்தடுத்த புகார்களையும் அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் ஆ.ராசாவை ஆதரித்து புதுச்சேரியில் மனுதர்ம நூல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
இதேபோல் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பேராசிரியர் சரஸ்வதி தலைமையில் மனுதர்ம எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. ராமநாதபுரத்தில் மனுதர்ம நூல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் வரும் 29-ந் தேதி பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தந்தை பெரியார் திக வெளியிட்ட செய்திக் குறிப்பில், கோவை,மேட்டுப்பாளையத்தில் பார்ப்பானிய பாசிச சங்பரிவார காவி பாயங்கரவாதத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் அனைத்து முற்போக்கு அமைப்புகள்,ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் பெரியார் கைத்தடி ஊர்வலம் சங்பரிவார பாசிச கும்பலின் காவிக்கோட்டை எனும் கனவுகோட்டையை தகர்த்தெரிவோம். காவி பார்ப்பன பாசிச பயங்கரவாதத்தை தகர்த்தெறிய தந்தை பெரியார் திராவிட கழக தோழர்கள் அனைவரும் தவறாமல் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும். குறிப்பு: தந்தை பெரியார் படம்,கைத்தடி பொறித்த டி-சர்ட்ஸ் பேரணியில் பங்கேற்பதற்கு தயார் செய்யப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.