ஒரு விஷயத்தை கவனித்தீர்களா.. சமீப காலத்தில் முதல் முறை.. ரஜினிகாந்த் வியூகம் பலிக்குமா, கவிழ்க்குமா?
Recommended Video
சென்னை: ராமர் மற்றும் சீதை உருவப்படங்கள் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறப்பட்ட விஷயத்தில், தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியின்போது, ராமர் மற்றும் சீதை ஆகியோரின் படங்கள் நிர்வாணமாக எடுத்து வரப்பட்டதாகவும், அவை செருப்பால் அடிக்கபட்டதாகவும், துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் பேசியிருந்தார்.
ஆனால், ராமர் மற்றும் சீதை படங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், செருப்பால் அடித்தது போன்ற நிகழ்வு ஏதும் நடைபெறவில்லை என்றும் திராவிடர் கழகம் மற்றும் பெரியார் இயக்கங்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
நான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி
ரஜினிகாந்த் பேட்டி
ரஜினிகாந்த் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அவரது இல்லத்தை முற்றுகையிட போவதாக பெரியாரிய இயக்கங்கள் எச்சரித்துள்ளன. பல்வேறு காவல் நிலையங்களிலும், ரஜினிகாந்துக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான், தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று காலை நிருபர்களிடம் பேட்டியளித்த ரஜினிகாந்த், 2017 ஆம் ஆண்டு வெளியான அவுட் லுக் இதழை, சுட்டிக் காட்டி, அதில் இந்த செய்தி வெளியாகி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் பேசியதால், தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
விளக்கங்கள்
ரஜினிகாந்த் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்து விட்டு பிறகு விளக்கம் அளிக்கக் கூடிய பேட்டிகள் புதிது கிடையாது. "யார் அந்த ஏழு பேர்?" என்பதாக இருக்கட்டும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, அளித்த பேட்டியில் வெடித்த சர்ச்சையாகட்டும், இவை தொடர்பாக பின்னொரு நாளில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, தான் ஏற்கனவே அளித்த பேட்டியிலிருந்த ஆவேசத்தை குறைத்துக்கொண்டு, தன்மையாக பேட்டியளித்தார். தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
முதல் முறை
அதேநேரம், பெரியார் விஷயத்தில் மட்டும், அவர், தான் ஏற்கனவே, தெரிவித்த கருத்தில், உறுதியாக இருப்பதாகவும், மன்னிப்பு கேட்க முடியாது என்றும், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், விரைவில் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தனது அரசியல், நிலைப்பாடு எது என்பதை வெளிப்படையாக தெரிவித்து விட்டார் என்றுதான் சொல்ல முடியும்.
பெரியார் மையப்புள்ளி
தமிழகத்தில், உள்ள அனைத்துக் கட்சிகளும், அது பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் கூட, பெரியார் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவைதான். அரசியலில் எத்தனையோ நிலைப்பாடுகளையும், கூட்டணிகளை ஏற்றுக்கொண்ட போதிலும், பெரியார் என்ற மையப்புள்ளியில் அவை இணைந்து நிற்கின்றன.
எதிர் சித்தாந்த அரசியல்
இந்த விஷயத்தில் பாஜக பெரியார் கொள்கைக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சி தான் என்ற போதிலும் கூட, அங்கு தமிழகத்தில் மக்கள் ஆதரவு கொண்ட பெரிய தலைவர்கள் இல்லை. எனவே, இந்த வெற்றிடத்தை நிரப்பலாம் என்று ரஜினிகாந்த் நினைத்து விட்டார் என்று தோன்றுகிறது. ஆனால் பெரியார் சித்தாந்தத்துக்கு எதிராக வெற்றிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது தொக்கி நிற்கும் கேள்வி! வருங்காலம் இதற்கான பதிலை சொல்லும்.