நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஓட்டுக்களை எண்ணக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Recommended Video
சென்னை: நடிகர் சங்க தேர்தலை ஜூன் 23ஆம் தேதியே நடத்தலாம். ஆனால், வாக்குகளை எண்ணக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த பதிவாளரின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகாரி கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மேலும், ஜூலை 8ஆம் தேதிக்குள் கூட்டுறவு சங்க பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது
இந்தநிலையில், திட்டமிட்டபடி நாளை மறுநாள் தேர்தலை நடத்துவோம். நீதிமன்றத்தின் உத்தரவு தெளிவை ஏற்படுத்தியுள்ளது; நாங்கள் நீதியை மதிக்கிறோம் என்று நாசர் கூறியுள்ளார்.
கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட நாசர், விஷால் தலைமையிலான 'பாண்டவர் அணி' இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையில் 'சுவாமி சங்கரதாஸ் அணி' என இருமுனை போட்டியாக இந்த நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது
ஏற்கனவே, வருகிற 23 ஆம் தேதி, நடிகர் சங்கத்தின் தலைவர், உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல், சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு வழங்க உத்தரவிட கோரி, உயர்நீதிமன்றத்தில் விஷால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத மாற்று இடத்தை தெரிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என கூறிய நீதிபதி, நந்தனம் ஒய்.எம்.சி.எ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை தேர்வு செய்யுமாறு வெங்கடேஷ் அறிவுறுத்தினார்.
நடிகர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தொலைவில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலானோர் வர மாட்டார்கள் என்றார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தலை பற்றி கவலையில்லை, மக்களின் பாதுகாப்பே முக்கியம் என நீதிபதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.