மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை என கூச்சமே இல்லாமல் பொய் பேசும் அண்ணாமலை: பீட்டர் அல்போன்ஸ் பொளேர்
சென்னை: மிசா சட்டத்தின் கீழ் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவே இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூச்சமே இல்லாமல் பொய் பேசுவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சாடியுள்ளார்.
1975-1976-ம் ஆண்டு கால கட்டத்தில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரால் நாடு முழுவதும் அவசரநிலை (மிசா) பிரகடனம் செய்யப்பட்டு ஒடுக்கு முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அவசரநிலையை ஆதரிக்க மறுத்ததால் தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பல லட்சக்கணக்கான திமுகவினர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கருணாநிதியின் மகன் என்பதால் தற்பொதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைகளுக்கு உள்ளானார்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென அதிமுக, பாஜகவினர், ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என கூறி பிரசாரம் செய்தனர். இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், முரசொலி மாறன், நான் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 500 பேர் 'மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க.வினர் அனைவரும் பல்வேறு சித்ரவதைகளை அனுபவிக்க வேண்டி இருந்தது. நாங்கள் கொடூரமாக தாக்கப்பட்டோம்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளைக் கொண்டு எங்களை தாக்கினர். கொடுமையான தாக்குதல் காரணமாக எனது கையில் காயம் ஏற்பட்டது. அந்த வடு இப்போதும் இருக்கிறது.என்னை காப்பாற்றுவதற்காக கேட்ட குற்றத்திற்காக அண்ணன் சிட்டிபாபுவை படுக்க வைத்து தாக்கி பூட்ஸ் காலால் தாக்கி வயிற்றில் போலீசார் மிதித்துள்ளனர். இதனால் அவருக்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு சீழ் பிடித்தது. பின்னர் அவர் உடல் நிலை மோசமானதால் ஆபரேஷன் நடந்தது. என்றாலும் அவர் உயிர் பிழைக்கவில்லை பின்னர் மரணம் அடைந்தார் என சுட்டிக்காட்டி இருந்தார்.
அவசர நிலை பிரகடனம்- சிறையில் மு.க.ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகள்-விவரிக்கும் இஸ்மாயில் கமிஷன் அறிக்கை
இந்நிலையில் காரைக்குடியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தொண்டர்கள்சிறைக்கு அஞ்சுபவர்கள் அல்ல; முதல்வர் ஸ்டாலின்தான் சிறைக்கு செல்ல அஞ்சியவர். மிசா வழக்கில் ஸ்டாலின் சிறைக்கு செல்லவில்லை. ஆனால் மிசாவில் கைது செய்யப்பட்டதாக ஸ்டலைன் பொய் சொல்கிறார் என கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், இவைகளுக்கெல்லாம் முடிவே இல்லையா? கூச்சம் இல்லாமல் பொதுத்தளத்தில் பொய்சொல்ல வெட்கப்படமாட்டார்களா? நாம் அடிமுட்டாள்கள் என நினைப்பா? இவர்களது இயல்பே இதுதான் என்று ஏற்றுக்கொண்டு வாழ்வதைத்தவிர வேறு வழி ஏதாவது உண்டா? அறிந்தவர் சொன்னால் ஆயிரம் பொன் பரிசு என சாடியுள்ளார்.