திருநாவுக்கரசரை நீக்கிவிட்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்?
Recommended Video
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள திருநாவுக்கரசரை நீக்கிவிட்டு அப்பதவிக்கு பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கோஷ்டிகள் உள்ளன. இவர்களுக்குள் அவ்வப்போது வாக்குவாதங்கள், கோஷ்டி மோதல்கள் ஏற்படுவது வாடிக்கையாகும்.
தற்போது அக்கட்சியின் தமிழக தலைவராக திருநாவுக்கரசர் உள்ளார். அவருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் விரோத போக்கு இருந்து வருகிறது. இவர் மட்டுமல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒருங்கிணைந்து செய்யாத போக்கும் நிலவி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் சென்னை ராயப்பேட்டையில் இரு தரப்பினரும் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திருநாவுக்கரசரே சமரசம் செய்து வைத்தார்.
தொடக்கம்
இந்த ஒற்றுமையின்மை தேர்தலிலும் எதிரொலிக்கிறது. திருநாவுக்கரசருக்கும் பிரதான கூட்டணி கட்சியான திமுகவுக்கும் இடையே கூட சிறு சலசலப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் வடமாநிலங்களில் பாஜகவை ஓரம் கட்டிவிட்டு காங்கிரஸ் கட்சியை மக்கள் ஆதரிக்க தொடங்கிவிட்டனர்.
பொதுத் தேர்தல்
இன்னும் தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் வரவிருக்கின்றன. இந்த சமயத்தில் காங்கிரஸ் மேலும் வெற்றி பெற அனைவரும் சேர்ந்து பணியாற்றினால்தான் முடியும். ஆனால் இப்போதைய கோஷ்டி அரசியலால் அது சாத்தியம் அல்ல என்பதை காங்கிரஸ் தலைமை உணர்ந்துவிட்டது.
நெருக்கமானவர்
அதனால் திருநாவுக்கரசரை நீக்கிவிட்டு பீட்டர் அல்போன்ஸை தலைவராக நியமனம் செய்ய ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பீட்டர் அல்போன்ஸ் மூப்பனார், கருணாநிதி, ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். முதலில் மூப்பானாருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விட்டு பின்னர் ஜி.கே. வாசனுடன் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கே வந்துவிட்டார்.
வெளியிட வாய்ப்பு
மேலும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல் பேச்சை திருநாவுக்கரசரும், சோனியா பேச்சை பீட்டரும் மொழிபெயர்த்தனர். இதிலும் திருநாவுக்கரசர் மொழிபெயர்ப்பை விட பீட்டரின் மொழிபெயர்ப்பு சூப்பராக இருந்ததாக அவர் ஸ்கோர் செய்துவிட்டார். எனவே பீட்டர் அல்போன்ஸ் குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிகிறது. இது போன்ற மாற்றங்கள் பாஜகவுக்கு எதிராக ராகுலின், கட்சியை பலப்படுத்தும் வியூகம் என கருதப்படுகிறது.