நாங்குநேரி தொகுதியில் களமிறங்குகிறாரா பீட்டர் அல்போன்ஸ்?
சென்னை: நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் பதவி விலகியதையடுத்து அத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் களமிறங்குவார் என தகவல்கள் கூறுகின்றன.
நாங்குநேரி எம்.எல்.எ வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் வசந்தகுமார் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். இதனையடுத்து அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
சட்டபேரவை தலைவர் தனபாலிடம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தைக் கொடுத்தார். வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் வென்றதுமே நாங்குநேரி தொகுதியில் அடுத்து போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.
போலீஸ் கட்டிங்.. முறுக்காத மீசை.. அரைக் கை சட்டை.. லூஸ் பேன்ட்.. அரசின் அதிரடி கட்டுப்பாடுகள்
போட்டி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வசந்தகுமாரிடம் "நாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது ஏற்கெனவே நடைபெற்ற இடைத்தேர்தல்கள் போல திமுகவே போட்டியிடுமா?" என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்து பேசிய வசந்தகுமார் " நாங்குநேரி காங்கிரஸின் தொகுதி. இரண்டு முறை அங்கு நான் வெற்றி பெற்றுள்ளேன்.
மக்கள் உதவுவார்கள்
திமுக போட்டியிடுமா என்பதனை அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் முடிவு செய்வார்கள். காங்கிரஸ் தொகுதி என்பதால் நாங்கள் போட்டியிடுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். நான் சுட்டிக் காட்டும் நபரை வெற்றி பெறவைக்க மக்கள் உதவுவார்கள்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தோல்வி
இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த மாநில காங்கிரஸ் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் சோளிங்கர், ஓசூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு தோற்றது.
காங்கிரஸ் போட்டி
இந்த தொகுதிகளில் அதிமுக வென்றது. பின்னர் அதிமுகவில் நடந்த பிளவில் இந்த தொகுதிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு இடைதேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட்டது. ஆனால் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வென்ற தொகுதி அதோடு காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதி என்பதால், இங்கு அடுத்து வருகின்ற இடைதேர்தலில் காங்கிரசே மீண்டும் போட்டியிடும் என தெரிகிறது.
அல்போன்ஸ்
அதற்காக காங்கிரஸ் தலைமை மூலம் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று தெரிகிறது. அப்படி காங்கிரசே இந்த தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
திமுக தலைமை
மேலும் காங்கிரஸ் வேட்பாளராக பீட்டர் அல்போன்ஸ் வேட்பாளாராக நிறுத்தப்பட்டால் திமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு இருக்க வாய்ப்பு இல்லை. பீட்டர் அல்போன்ஸ், கருணாநிதி காலத்தில் இருந்தே திமுகவுக்கு மிகவும் நெருக்கமானவர். அதோடு மக்களவை தேர்தலிலும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட பீட்டர் அல்போன்ஸ் விருப்பம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் திமுக தலைமையுடன் பேசியும் வந்தார்.
அதிக வாய்ப்பு
ஆனால் அப்போதிருந்த சூழலில் அவருக்கு திருநெல்வேலி தொகுதி கொடுக்கப்படவில்லை. ஆகவே இப்போது பீட்டர் அல்போன்ஸ் நாங்குநேரி தொகுதியை கேட்கும் பட்சத்தில் திமுக அதற்கு மறுப்பு தெரிவிக்காது என்று கூறுகிறார்கள் கதர் சட்டையினர். ஆகவே நாங்குநேரி தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டால் திமுக கூட்டணி சார்பில் பீட்டர் அல்போன்ஸ் களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது