நிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்
Recommended Video
சென்னை: மத்திய பட்ஜெட் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி, செம்மலை, பீட்டர் அல்போன்ஸ், பாலகிருஷ்ணன், திருச்சி எம்பி சிவா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் 2019-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. ஆடிட்டர் குரூமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விஐடி பல்கலைக் கழகத்தின் நிறுவனர் விஸ்வநாதன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ செம்மலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக எம்.பி திருச்சி சிவா எம்பி, காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், பிஜேபி சார்பில் இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி கூறும்போது, ஜாதி அடிப்படையில் என்ன செய்திருக்கிறோம் என்ற அறிவிப்பு இல்லாத பட்ஜெட் வரவேற்கிறேன். பட்ஜெட்டில் துறை வாரியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் எந்த அளவு முன்னேற்றம் ஏற்படும் என்பது பற்றியும் தெளிவாக கூறியுள்ளனர்.
பொருளாதாரம்
இந்த பட்ஜெட் 5 ஆண்டு திட்டமாகத்தான் மட்டுமே உள்ளது. சாதாரண மாணவர்களை திருப்திப்படுத்துவதற்காக பட்ஜெட் போடவில்லை. நெடுநாள் நோக்கத்துடன் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்படவில்லை. இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் பொருளாதாரத்தை பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரி செலுத்தும் முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும். நிதியமைச்சர் இதை கவனிக்க வேண்டும் எனக் கூறினார்.
அமெரிக்க டாலர்
பின்னர் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பேசுகையில் பொருட்கள் வாங்கக் கடைக்கு செல்லும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது தான் சிறந்த பட்ஜெட். புள்ளி கணக்குகளை வைத்து சிறந்த பட்ஜெட் எது என்பதை கணக்கிடக் கூடாது. உலகமயமாக்கல் கொள்கையை வைத்து தான் இந்தியாவின் பட்ஜெட் போடப்படுகிறது. அமெரிக்க டாலர் தான் இந்திய பட்ஜெட்டை தீர்மானிக்கிறது. விவசாயிகளுக்கு பட்ஜெட் உதவியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
வருமானம்
திமுக சார்பில் எம்.பி. திருச்சி சிவா கூறும்போது, ஜி.எஸ்.டி வரியால் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து இந்த நிதியாண்டு வரை தீர்க்கப்படவில்லை. கார்ப்பரேட் வாங்கிய 5.5 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் மாணவர்கள் வாங்கிய கல்விக் கடனுக்காக அவமானப்படுத்தப்படுகிறார்கள். கடந்த ஆண்டு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை என்றும் இந்த வருமானம் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி மூலம் எதிர்பார்த்த வரி கிடைக்காததுதான் எனக் கூறினார்.
அரங்கேறியது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு: பொதுவாக ஒரு நிதிநிலை அறிக்கை என்பது நாட்டில் உள்ள பிரச்சினைகளை அறிந்து அதற்கான தீர்வை அது வழங்க வேண்டும். ஆனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் இந்த நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வு கூட அதிகம் இந்தியாவில் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. ஒரு பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது பெருமையாக இருக்கிறது.
நிதி நிலை அறிக்கை
பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த திட்டமும் இல்லை. தனியார் மற்றும் கார்ப்பரேட்மயமாக்கல் போன்றவற்றைதான் இந்த நிதிநிலை அறிக்கை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் கல்விக்கு என்று எந்த முக்கிய நிதியும் ஒதுக்கப்படவில்லை. முக்கியமான பிரச்சினை குறித்து இந்த நிதிநிலை அறிக்கை ஏதும் செய்யவில்லை என்றார்.
அதிக பணம்
இந்த நிதிநிலையில் அதிகமான பணம், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கே செல்கிறது. இதன் மூலம் வருமானம் எவ்வாறு ஈட்ட முடியும் என கேள்வி எழுப்பினார். இந்த பட்ஜெட் என்பது தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தாரைவார்க்கும், அவர்களுக்கு மட்டும் பயனளிக்கும் வகையில் தான் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது எனக் கூறினார்.
நிதி நிலை அறிக்கை
அதிமுக சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் செம்மலை கூறும்போது, பொருளாதாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இது தொலைநோக்கு பட்ஜெட்டாக இருந்தாலும், ஏழைகளை பாதிக்கக்கூடிய பெட்ரோல் டீசல் 2 சதவீத வரி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். நிதி நிலை அறிக்கையை விமர்சனம் செய்யலாம் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது எனக் கூறிய அவர், ப.சிதம்பரம் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தார். ஆனால் அவர் நிதிஅமைச்சரக இருந்த பொழுது எல்லாரும் ஏற்றுக்கொள்ளகூடிய பட்ஜெட் தாக்கல் செய்தாரா?? என செம்மலை கேள்வி எழுப்பினார்.
நிதி நிலை
காங்கிரஸை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் கூறும்போது, எம்.எல்.ஏ செம்மலை நல்லவர். ஆனால் அவர் இருக்கும் இடம் தவறு என்று கூறிய அவர், செம்மலைக்கே இந்த பட்ஜெட்டின் நிலை குறித்து தெரியவந்துள்ளது. அவர் மனதை நிதிநிலை அறிக்கை உறுத்துகிறது எனவும், இது மாநில உரிமைகளை பறித்துள்ளது என்பதை செம்மலை ஏன் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அது எனக்கு வருத்தம் அளிக்கிறது. நிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை அமர வைத்து பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை எனக் கூறினார். மேலும் வாயினால் வடை சுடுவது என்பது தான் இந்த பட்ஜெட் குறித்த கருத்து என்றார்.