நாட்டில் சகோதரத்துவத்தை தேட வேண்டியுள்ளது... காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேதனை
சென்னை: நாட்டில் சகோதரத்துவத்தை தேட வேண்டியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் நடத்திய சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், பலரது தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக தெரிவித்தார்.
சுதந்திர தினம்.. வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி.. மக்கள் கூட்டம் இன்றி நடைபெற்றது!
சிறப்பு கருத்தரங்கம்
நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் ''சும்மாவா கிடைத்தது சுதந்திரம்'' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் மற்றும் வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், என பலரும் பங்கேற்று சுதந்திர தினம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினர்.
நினைவு கூற வேண்டும்
அப்போது பேசிய பீட்டர் அல்போன்ஸ், நாட்டிற்காக அல்லும் பகலும் அயராது தொண்டாற்றி மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இந்த தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஐஐடி, எய்ம்ஸ், பொதுத்துறை நிறுவனங்கள், அணைகள், ஐந்தாண்டு திட்டங்கள் என அவர் சுதந்திர இந்தியாவுக்கு செய்த சேவைகள் ஏராளம் என பட்டியலிட்டார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் நேரு என புகழாரம் சூட்டினார்.
தேட வேண்டியுள்ளது
தற்போதைய சூழலில் நாட்டில் சகோதரத்துவத்தை தேட வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்த பீட்டர் அல்போன்ஸ், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய இரண்டையும் பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளதாக தெரிவித்தார். சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைத்துவிடவில்லை என்றும் பலரது தியாகங்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், மூலம் கிடைத்த சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை வழக்கறிஞர்கள் பெருமக்களுக்கு உள்ளதாக தெரிவித்தார்.
உரிமைகள் இழப்பு
கொரோனா காலத்தில் மக்களின் கவனம் வேறு திசையில் உள்ளதால் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், கல்விக்கான உரிமைகள் தொடங்கி பல விவகாரங்கள் வரை பட்டியிட்டு பேசினார். மேலும், கொரோனாவுக்கு விரைவில் தீர்வு கண்டு அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனக் கூறினார்.