அரிசிக்கு பதிலாக பணம்.. புதுவை ஆளுநரின் உத்தரவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஹைகோர்டில் ஒத்திவைப்பு
சென்னை: புதுவையில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டுமென ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
புதுவையில் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாரயணசாமி, வலியுறுத்தியிருந்தார். இலவச அரிசுக்கு பதிலாக பணமாக பயணாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும்படி அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்று புதுவையில் அரிசிக்கு பதில் பணம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயேன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது முதல்வர் தரப்பில், புதுச்சேரி அமைச்சரவை தீர்மானத்தை மீறி துணை நிலை ஆளுநர் செயல்ப்படுவதாகவும், இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
மத்திய அரசு தரப்பில், யூனியன் பிரசதேசத்தின் முதல்வர் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர உரிமையில்லை எனவும், மக்கள் அரிசிக்கு பதிலாக பணத்தை பெறுவதை தடுக்கும் உள் நோக்கத்தின் காரணமாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.