உடனே லோக்சபா தேர்தலை ரத்து செய்யுங்க.. விநோத கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்தியே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அப்படி நடத்தப்படாததால் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 கட்டங்களாக நடந்தது முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23 ம் தேதி நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்தது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வித்தியாசமான காரணங்களை கூறி நடந்த முடிந்த லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர் எம்எல் ஆனந்த் சர்மா இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி தேர்தல் என்பது வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி மட்டுமே நடத்த வேண்டும்.. ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. எனவே லோக்சபா தேர்தலை உடனே ரத்து செய்ய வேண்டும். வாக்குச்சீட்டுக்கள் அடிப்படையில் மீண்டும் லோக்சபா தேர்தலை நடத்த என கூறியுள்ளார். மேலும் தனது மனுவை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஆனந்த் சர்மாக தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடு நிகழும் வாய்ப்பு இருப்பதாகவும் வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கைகள் வைத்து வருகின்றன. இந்த சூழலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தை ஒருவர் அணுகி இருப்பதை ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.