ஆர்கேநகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு.. சிபிஐ விசாரிக்குமா.. தீர்ப்பை ஒத்திவைத்தது ஹைக்கோர்ட்
சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது..
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்..
வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் யார் பெயரையும் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி வழக்குரைஞர் வைரகண்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்..
அரசு விளக்கம்
அதேபோல, பணப்பட்டுவாடா-வை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுக வை சேர்ந்த மருது கணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்..இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது..
சிபிஐ விசாரிக்க வேண்டும்
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வைரக்கண்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் துரைசாமி, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரி மீண்டும் புகார் அளிக்க வேண்டும் என்றும் அதை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார்..
அரசு தலைமை வழக்குரைஞர்
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நிரஞ்சன், பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.. அதேசமயம், இந்த வழக்கு மேல் முறையீட்டுக்கு உகந்ததல்ல என தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஆலோசனை வழங்கி இருப்பதாக அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்..
தமிழக அரசுக்கு கேள்வி
திமுக வேட்பாளர் மருது கணேஷ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நீலகண்டன், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தேர்தல் ஆணையப் கைகோர்த்து செயல்படுவதாக தெரிவித்தார்..அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் கடந்த 10 மாதங்களாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
பின்னர், பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வைரக்கண்ணன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். அதேபோல, பணப்பட்டுவாடா-வை தடுக்க விதிகளை உருவாக்க கோரியும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தாக்கல் செய்த மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.