2013இல் இருந்து காத்திருக்கிறோம்.. குரூப்-4 தேர்வுக்கு தடை கோரி வழக்கு.. அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் போது புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2018-2019. 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான குரூப்4 தேர்வுக்கான அறிவிப்பாணையை இன்று வெளியிட்டுள்ளது. இதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் என 6,491 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இன்று முதல் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் வரும் செப்டம்பர் 1ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் கூறியுள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்பாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் போது அவர்களை வைத்து காலியிடங்களை நிரப்பாமல் புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு இருப்பது தவறு என்றும், எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'6491 குரூப் 4 பணியிடங்கள்' 10ம் வகுப்பு படித்தால் ரூ.62 ஆயிரம் வரை ஊதியம்.. டிஎன்பிஎஸ்சி
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழகஅரசு வரும் ஜுன் 26 ம் தேதிக்கள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.