ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு.. 30ம் தேதி ஹைகோர்ட் விசாரணை
சென்னை: நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொது செயலாளர் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள மனுவில், 1996 முதல் 2001 வரை நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல்களில் நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேர்த்தே நடத்தப்பட்டன என்பதால், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி தனியாக தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமான என குறிப்பிட்டுள்ளார்.
ஊராட்சி உறுப்பினர் மற்றும் தலைவர் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை என்றபோதிலும், பஞ்சாயத்து வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவில் தாக்கம் ஏற்படுத்தும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முடிவுகளை வெளியிட
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தபட்ட தேர்தல் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்ததாகவும், அதற்கு பதிலளித்த ஆணையம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என விளக்கமளித்துள்ளதால், ஒன்றாக சேர்த்து முடிவுகளை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் அமர்வு
நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் பல கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டாலும், எண்ணிக்கை ஒரே நாளில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியாநாதன் ஆஷா அமர்வு முன்பு டிசம்பர் 30ல் விசாரணைக்கு வருகிறது.
கண்காணிப்பு கேமரா
இதனிடையே தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க கோரி மதிமுக சார்பில சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி முறைகேடு
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்றும், 30ம் தேதியும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. இன்றைய தேர்தலில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் தெரிவித்தும், மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, மதிமுக செய்தி தொடர்பாளர் நன்மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தேர்தல் ஆணையம்
அந்த மனுவில், முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்து ஐந்து நாட்களுக்கு பிறகே, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், அதுவரை, வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதும், நேர்மையாக, நியாயமாக வாக்கு எண்ணிக்கை நடத்துவதுடன் மாநில தேர்தல் ஆணையத்தின் கடமை என தெரிவித்துள்ளது.
30ல் விசாரணை
மேலும், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கான வாக்குகளும் ஒரே பெட்டியில் போடப்படுவதாகவும், அவற்றை தனித்தனியாக பிரித்து எண்ணும் போது, முறைகேடுகள் நடக்காதபடி, உள்ளாட்சி தேர்தல் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அனைத்து நடைமுறைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அனுமதிக்கவும் கோரியுள்ளார். இந்த மனு வரும் 30ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது