பேருந்து நிலையங்களை சுத்தமாக வைக்க கோரி வழக்கு.. ஹைகோர்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளதாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மை செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்
சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள், சுகாதார கேடுடன் இருப்பதாகவும், பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால் தான் இந்த சுகாதார கேடு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு, வாழ்வுரிமையை வழங்கியுள்ளதாகவும், அது சுகாதாரமான சூழ்நிலையை அனுபவிப்பதும் அடங்கும் எனக் கூறியுள்ள மனுதாரர், மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களை சுத்தமாக பராமரிக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு 2015ல் மனு அளித்தும், எந்த பதிலும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெருக்களையும், பொது இடங்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், இந்த சட்டப் பிரிவுகளை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்கும்படி, தமிழக வருவாய் துறை, உள்துறை, போக்குவரத்து துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை செயலாளர்களுக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிட்டிருந்தது
மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு தொடர்பாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மை செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அம்மா வீட்டில் தூக்கில் தொங்கிய புதுப் பெண்.. லாட்ஜில் ரூம் போட்டு மாப்பிள்ளையும் தற்கொலை!
அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் ஒவ்வொரு துறை சார்ந்த மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறித்தான அறிக்கையும் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஒரு வார காலத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 6ஆம் தேதியன்று ஒத்திவைத்தனர்