பெட்ரோல், டீசல் விலை தினமும் புது உச்சம்.. சென்னையில் இன்றைய விலை என்ன தெரியுமா?
சென்னை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் புது உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70 ஆகவும், டீசல் ரூ.98.59 ஆகவும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுிகறது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது.
உலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay
சென்னை நிலவரம்
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70 ஆகவும், டீசல் ரூ.98.59 ஆகவும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 15வது முறையாக உயர்ந்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிற நகரங்களில் அதிகம்
தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரியை குறைத்ததால் இந்த நிலையில் உள்ளது. பெங்களூர், மும்பை போன்ற பிற நகரங்களில் தமிழகத்தை விட பெட்ரோல் விலை அதிகமாகும்.
மும்பையில் மிக அதிகம்
மும்பை: பெட்ரோல் ரூ. 111.43 மற்றும் டீசல் ரூ. 102.15, டெல்லி: பெட்ரோல் ரூ. 105.49 மற்றும் டீசல் ரூ. 94.22, கொல்கத்தா: பெட்ரோல் ரூ .106.11 மற்றும் டீசல் ரூ .97.33, சென்னை: பெட்ரோல் ரூ .102.70 மற்றும் டீசல் ரூ .98.59. இதுதான் இன்றைய நிலவரம்.
Recommended Video
காங்கிரஸ் தலைவர் கண்டனம்
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கொரோனா தொற்று காரணமாகவும், பொருளாதார தேக்க நிலையினாலும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது. இத்தகைய விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல போராட்டங்களை நடத்தி எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்த எதிர்ப்பை கடுகளவு கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சி காலம்
2014-15 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.48 ஆக இருந்தது, தற்போது ரூ.32.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஒரு லிட்டர் டீசலுக்கு கலால் வரி ரூ.3.56 இல் இருந்து ரூ.31.80 என கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கலால் வரி 459 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2014 இல் ரூ.410 ஆக இருந்தது. ஆனால், தற்போது 2021 இல் ரூ.810 ஆக இருமடங்கு விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய விலை உயர்வினால் போக்குவரத்து கட்டணம் உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயருகிற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான பணவீக்கத்தை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
பாஜக ஏற்கவில்லை
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று ஒருபக்கம், பொருளாதார பேரழிவினால் ஏற்பட்ட பாதிப்பு ஒருபக்கம் என அனைத்து நிலைகளிலும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, வாங்கும் சக்தி குறைந்து பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை அலட்சியப் போக்குடன் மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலமே மக்களின் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.