பாஜகவின் அழுத்தம் கூடாது.. பெட்ரோல் குண்டு வீச்சில் போலீஸ் தீர விசாரிக்கணும்..பிஎப்ஐ வலியுறுத்தல்
சென்னை: ‛‛பிஎப்ஐ, எஸ்டிபிஐ அமைப்புகள் ஒருபோதும் வன்முறையை கையில் எடுக்காது. தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக போலீசார் பாஜகவின் அழுத்தத்துக்கு ஆளாகாமல் தீர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக தலைவர் முகமது சேக் அன்சாரி கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக கோவை, ஈரோடு, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.
பாஜக அலுவலகம், அக்கட்சி பிரமுகர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
பரபரப்பு.. கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது!
கோவையில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு
கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகத்தை தொடர்ந்து கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கோவை புதூர் பகுதியில் ஆர்எஸ்எஸின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக-கேரள கேந்திர பொறுப்பாளரான ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரின் வீட்டிலும் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
ஈரோடு-சென்னை-மதுரை
ஈரோட்டிலும் ஈரோட்டிலும் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கடை ஒன்றில் டீசல் குண்டு வீசப்பட்டுள்ளது. அதன்பிறகு நேற்று இரவு சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவில் வசித்து வருபவர் சீதாராமன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவராக உள்ளார். இவரது வீடு மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதன்பிறகு நேற்று இரவு மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கிருஷ்ணனின் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
சேலத்தில் மண்ணெண்ணெய் குண்டு
இதன் தொடர்ச்சியாக சேலம் பொன்னம்மாபேட்டை பகுதி ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுதெடாடர்பாக காதர் உசேன், சையத் அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் இஸ்லாமிய அமைப்பினர் இருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றன.
சதிச்செயல்கள்
இந்நிலையில் தான் சென்னை புரசைவாக்கத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக தலைவர் முகமது சேக் அன்சாரி பேட்டியளித்தார். அப்போது அவர் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். இதுபற்றி முகமது சேக் அன்சாரி கூறியதாவது: ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு உறுதுணையாகவும், ஆதரவாக உள்ளது. இதனை கெடுப்பதற்காகவும், மாநில அரசுக்கு எதிராக சட்டம்-ஒழுங்கை சீரழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதில் காவல் துறை அதிகாரிகள் தெளிவான புரிதல் கொள்ள வேண்டும்.
தெளிவான விசாரணை
உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பாஜகவின் அழுத்தத்துக்கு ஆளாகி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை நிறுத்த வேண்டும். அழுத்தத்துக்கு பயந்து காவல்துறை விசாரிக்க கூடாது. அசம்பாவித சம்பவங்களின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது பற்றி காவல்துறை தெளிவான விசாரணை நடத்த வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் பிஎப்ஐ, எஸ்டிபிஐ வன்முறையை ஒருபோதும் கையில் எடுக்காது'' என்றார்.