மேலே... மேலே செல்லும் பெட்ரோல், டீசல் விலை...
சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 21 காசுகள் அதிகரித்து விற்பனை ஆகிறது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.
கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது.
இந்தநிலையில், நேற்று பேரலுக்கு 1.73 டாலர் உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெயின் விலை 53.80 டாலராக உள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் உயரக்கூடும் என கூறப்படுகிறது.